பணி நிரந்தரம், ஊதிய உயர்வு விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள், இரண்டாவது நாளாக போராட்டம் நடத்திவரும் நிலையில், போராட்டம் நடைபெறும் இடத்தின் உள்ளே பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டம் நடைபெறும் இடத்தின் உள்ளே இன்று பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், போராட்டம் நடத்திவரும் செவிலியர்களிடம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதேபோல், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், உயிர்காக்கும் செவிலியர்களை நடுத்தெருவில் போராடவிடுவதா என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், "2 ஆண்டுகளுக்கு செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணி செய்ய வேண்டும். இதுவரை 9,500-க்கும் அதிகமான செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 5 ஆண்டுகள், 7 ஆண்டுகள் என பணி செய்த செவிலியர்களை நிரந்தரம் செய்ய வேண்டியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு குடிநீர் வழங்கவில்லை என்பது பொய்", என கூறினார்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு பொது சுகாதார துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்தது ஏன் என அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், உங்களை ஏன் பணியிலிருந்து நீக்கக்கூடாது என விளக்கமளிக்குமாறும், உடனடியாக பணிக்கு திரும்புமாறும் அந்த நோட்டீஸில் பொது சுகாதார துறை கேட்டுக்கொண்டுள்ளது.