திண்டுக்கல் மாவட்டம் அருகே நேற்று ஏற்பட்ட கார் விபத்தில் ஷாலினி என்ற பெண் பத்திரிக்கையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் இருந்த 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள,பள்ளபட்டியில் வசிக்கும் தோழி ஒருவரைச் சந்திப்பதற்காக ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் ஷாலினி, ராம்குமார், சதீஸ், கோகுல், பிரபுராஜ் ஆகியோர் சென்றிருந்தனர். தோழியை சந்திந்துவிட்டு நேற்று காரில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் பொட்டிகுளம் அருகே கார் கட்டுபாட்டை இழந்து இடது புற பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இவர்கள் 5 பேரில் ஷாலினி என்ற பெண் பத்திரிக்கையாளர் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஷாலினியின் பிறந்தநாளன்றே இவரின் மரணம் ஏற்பட்டிருப்பது தீரா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷாலினியின் உடல் மருத்துவமனையில் இருந்து சொந்த ஊரான ஈரோட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அம்மைய நாயக்கனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.