ஆப்பிள் நிறுவனம் 4 புதிய ஐஃபோன் மாடல்களை இந்தாண்டு அறிமுகப்படுத்தும் எனவும், அதில், இரண்டு ஐஃபோன்கள் எல்சிடி திரையுடனும், மற்ற இரு ஐஃபோன்கள் ஓ.எல்.இ.டி. திரையுடனும் இருக்கும் என, Digitimes எனும் தொழில்நுட்ப ஆய்வுத்தளம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. இதில், எல்.இ.டி. திரைகொண்ட இரண்டு ஐஃபோன்கள், முறையே 5.7 இன்ச் முதல் 5.8 இன்ச் வரையிலும், மற்றொன்று 6.0 இன்ச் முதல் 6.1 இன்ச் வரையிலும் உயரம் கொண்டதாகவும் இருக்கும். அதேபோல், ஓ.எல்.இ.டி. திரைகொண்ட
இரண்டு ஐஃபோன்கள், முறையே 6 இன்ச் முதல் 6.1 இன்ச் வரையிலும், மற்றொன்று 6.4 இன்ச் முதல் 6.5 இன்ச் வரையிலும் உயரம் கொண்டதாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஐஃபோன் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜிங், 3டி சென்ஸிங் ஆகியவை சிறப்பம்சங்கள்.
இந்நிலையில், KGI Securities எனும் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டு மூன்று ஐஃபோன்களை அறிமுகப்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், இரண்டு ஐஃபோன்கள் ஓ.எல்.இ.டி. திரையுடனும், மற்றொன்று எல்.சி.டி. திரையுடனும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ.எல்.இ.டி. திரைகொண்ட ஐஃபோன்கள், முறையே 5.8 இன்ச் உயரம் கொண்டதாகவும், மற்றொன்று 6.5 இன்ச் (ஐஃபோன் எக்ஸ் பிளஸ்) உயரம் கொண்டதாகவும் இருக்கும். அதேபோல், எல்.சி.டி. திரை கொண்ட ஐஃபோன் 6.1 இன்ச் உயரம்கொண்டதாகவும் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஐஃபோன் எக்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் அதன் விற்பனை இந்தாண்டின் பாதியிலேயே நிறுத்தப்படும் என அந்த இணையத்தளம் கணித்துள்ளது.