கூகுள் நிறுவனம், தேடு தளத்தில் பாரபட்சமாக நடந்துக் கொள்ளுவதாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய போட்டி கண்காணிப்பு ஆணையம் கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 135.86 கோடி அபராதம் விதித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தேடல் நிறுவனமான கூகுளில், அனைத்து விதமான சந்தேகங்களுக்கு பதில் கிடைத்துவிடும். நாம் தேடும் தகவலுக்கு சம்பந்தம் உடைய அனைத்து தகவல்களையும் நொடி பொழுதில் நம் கண்முன் நிறுத்திவிடும். இத்தகைய தனித்துவமான கூகுள் சர்ச் இன்ஜின், தனியாருக்கு சொந்தமான பிரபல திருமணம் தளமான மேட்ரிமோனி.காம் தளத்தின் பெயரை தேடலில் காட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்காததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மற்ற நிறுவனத்தின் பெயரை காட்டுவதில் கூகுள் அதிக முக்கியத்துவம் அளித்ததாகவும், ஒருதலைபட்சமாக நடந்துக் கொள்வதாக அந்நிறுவனத்தின் மீது 2012 ஆம் ஆண்டு விசாரணை தொடரப்பட்டது. இந்த வழக்கை இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் விசாரித்து வந்தது. இந்த விசாரணையின் முடிவில் கூகுளின் மீது எழுந்த புகார் நிரூப்பிக்கப்பட்டது.
இதுக்குறித்து விளக்க அளித்துள்ள இந்திய போட்டி கண்காணிப்பு ஆணையம், கூகுள் நிறுவனம் இதுப்போன்ற செயல்களில் ஈடுபடுவதால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அத்துடன், கூகுளின் இத்தகைய செயல் அதைப் பயன்படுத்துபவர்களுக்கு பாதிப்பை விளைவிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது
இதன் காரணமாக கூகுள் நிறுவனத்திற்கு இந்திய போட்டி கண்காணிப்பு ஆணையம்,ரூ.135.86 கோடி அபராதம் விதித்து உத்ரவிட்டுள்ளது. மேலும், இந்த தொகையை அந்நிறுவனம், 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், நாட்டிலேயே முதன்மை தேடல் செயலியாக செயல்பட்டு வரும் கூகுள், இந்திய நிறுவனங்களுக்கு எப்போதுமே அதிக முக்கியத்தும் அளிக்கும் என்றும், இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று கூறியுள்ளது.