நாம் நம் ஸ்மார்ட்போன்களுக்கு பல்வேறு வகையான சார்ஜர் பயன்படுத்துகிறோம். USB Type-C, Type-B பயன்படுத்துகிறோம். அதேபோல் ஐபோனுக்கு பிரத்யேக சார்ஜர் உள்ளது. இவ்வாறு பலவற்றை பயன்படுத்தி வருகிறோம். இது பல சமயங்களில் சிக்கலானதாக உள்ளது. புது போன் மாற்றும்போதும், வெளியூர்களுக்கு செல்லும்போது என பல வகைகளில் சிக்கலானதாக உள்ளது.
அந்தவகையில் அனைத்து மொபைல் போன்களுக்கும் (ஒரே சார்ஜர்) பொதுவான சார்ஜரை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அனைத்து பிராண்ட் போன்களுக்கு ஒரே சார்ஜர் என்று நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருகிறது.
இதற்காக நிபுணர் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான சார்ஜர் கொள்கையை ஏற்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரே சார்ஜர் பயன்படுத்தும் கொள்கை (பாலிசி) கொண்டுவரப்பட்டுள்ளது.
மின்னணு கழிவு (e-waste) தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கவும், பயனர்களுக்கு உதவியாக இருக்கவும் பொதுவான சார்ஜர் கொள்ளை கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது. நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தலைமையில் பங்குதாரர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் இந்தியாவில் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய நிபுணர் குழுவை அமைக்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில், எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள் கண்டுபிடிப்பு கூட்டமைப்பு (EPIC) அறக்கட்டளை தலைவர் மற்றும் HCL நிறுவனர் அஜய் சௌத்ரி, தகவல் தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் சங்கம் (MAIT) தலைவர் ராஜ்குமார் ரிஷி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் குமார் சிங், பொதுவான சார்ஜர் கொள்கை ஒரு "சிக்கலான பிரச்சினை". இந்தியாவில் சார்ஜர்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆகையால் இறுதி முடிவு எடுப்பதற்கு முன் பல தரப்பிடமிருந்து கருத்துக்கள் கேட்கப்படும். தொழில்துறை, பயனர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பங்குதாரரும் வெவ்வேறு கண்ணோட்டத்தில், பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்தியா பல நாடுகளுக்கு சார்ஜர்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடாக இருப்பதால், பொதுவான சார்ஜர் கொள்கையின் தாக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக பெரும்பாலான பங்குதாரர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் பலர் குறைந்த விலை ஃபீச்சர் போன்களைப் பயன்படுத்துவதால், இந்தக் கொள்கை நடைமுறைக்கு வந்தால், அவர்கள் மீது கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், பொதுவான சார்ஜருக்கு மாறுவது ஃபீச்சர் போன்களின் விலையை அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்பட்டது.
இந்த கொள்கையின் தொடக்கத்தில் இந்தியாவில் இரண்டு வகையான சார்ஜர்களுக்கு மாறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதாவது யூஎஸ்பி டைப்-சி மற்றும் வேறு சில சார்ஜர்கள் என இரண்டு வகையான சார்ஜர்கள் மட்டும் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறான பல சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இது குறித்து ஆராய மற்றும் பரிந்துரைகளை வழங்க நிபுணர் குழுக்களை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இந்தக் குழு 2 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, மொபைல் மற்றும் ஃபீச்சர் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் மற்றும் மின்னணு சாதனங்கள் ஆகிய மூன்று பிரிவுகளில் பயன்படுத்தப்படும் சார்ஜிங் போர்ட்களை ஆய்வு செய்து அறிக்கை தர தனி நிபுணர் குழு அமைக்கப்படும்" என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆண்ட்ராய்டு போன், ஐபோன் என அனைத்து வகை மொபைல் போன்களுக்கு ஒரே சார்ஜர் பயன்படுத்தும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.