உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனைகளில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று எச். டி. சி ஆகும். இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கான போட்டிகளில் நிலைத்து நிற்க முடியாமல் தடுமாறி வந்தது.
மிக சமீபத்தில் தன்னுடைய சேவை, உற்பத்தி, மற்றும் விற்பனையை இந்தியாவில் நிறுத்திவிட்டது எச்.டி.சி. மேலும் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தலைமை அதிகாரிகள் அனைவரும் வெவ்வேறு நிறுவனங்களுக்கு இடம் மாறத் தொடங்கினார்கள்.
மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போல் இல்லாமல், ஆரம்ப காலம் முதலே இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தது எச்.டி.சி.
சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் அதிக பட்ஜெட் கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்க, குறைந்த பட்ஜெட் கொடுத்து ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களை சியோமி தன்வசப்படுத்திக் கொண்டது.
ப்ளாக்பெர்ரி மாடல் போன்றும், நோக்கியா போன்றும் எச்.டி.சி. நிறுவனமும் ஒரு நாள் இந்த இண்டஸ்ட்ரியில் இருந்து வெளியேறும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இது மிகவும் சீக்கிரமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கவில்லை என்று எச்.டி.சி வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
2011ம் ஆண்டு 10.7% மார்க்கெட் பங்கினை வைத்திருந்த எச்.டி.சி, தைவான் மற்றும் அமெரிக்காவில் அதிக அளவு மொபைல் போன்களை விற்றது. 2011ம் ஆண்டின் முதலாம் காலாண்டில் உலக அளவில் அதிகமான போன்களை தயாரிக்கும் நான்காவது நிறுவனமாக இருந்தது எச்.டி.சி.
மேலும் 2011ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஆப்பிள் மற்றும் சாம்சங் போனின் விற்பனையை தோல்வி அடையச் செய்து சிம்மசொப்பனமாக விளங்கியது எச்.டி.சி. ஆனால் இன்று, 2018ல் எச்.டி.சியின் சர்வதேச மார்க்கெட் பங்கு வெறும் 1% மட்டுமே.
2008ம் ஆண்டு, ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் இயங்கும் முதல் ஸ்மார்ட் போனை வெளியிட்டது எச்.டி,சி தான். ஸ்மார்போன் உருவாக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விஆர்க்கு தன்னுடைய இலக்கினை மாற்றி இருக்கின்றது எச்.டி.சி. நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி போல் மொத்தமாக எச்.டி.சி காணாமல் போய்விடக் கூடாது என்பது தான் அனைவரின் விருப்பமாகவும் இருக்கிறது.