இந்தியாவில் 5ஜி சேவை அக்டோபர் 1-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி 5ஜியை தொடங்கி வைத்தார். தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் குறிப்பிட்ட சில நகரங்களில் தற்போது 5ஜி சேவையை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி 5ஜி சேவையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில் 3-வது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா தனது 5ஜி சேவை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் தேதி எதுவும் குறிப்பிடாமல் விரைவில் 5ஜி சேவை வழங்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது. தகவல்களின் படி, விஐ, (Vi) நிதி சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. நிதி சிக்கல்கள் சரிசெய்யப்பட்டவுடன் இந்தியாவில் 5ஜி சேவை வழங்க தயாராகும். 5ஜி தாமதம் விஐ-யின் வாடிக்கையாளர்களை பாதிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏஜிஎம் கூட்டத்தில் பேசிய வோடபோன் ஐடியா எம்.டி மற்றும் சி.இ.ஓ ரவீந்தர் தக்கர் கூறுகையில், "நாங்கள் இந்தியாவில் 5ஜி சேவை வழங்க தயாராக உள்ளோம். 5ஜி ஏலத்தில் கலந்து கொள்வோம். இருப்பினும், இந்தியாவின் 5ஜி பயன்பாட்டு நிகழ்வுகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்தியா தனித்துவமானது மற்ற நாடுகளில் பயன்படுத்துவதை இங்கு பயன்படுத்த முடியாது"என்று கூறியிருந்தார்.
தற்போது நிறுவனம் விரைவில் 5ஜி சேவை வழங்குவதற்கான பணிகளை செய்து வருகிறது. வோடபோன் ஐடியா 5ஜி அறிமுகத்தின்போது 5ஜி ரீசார்ஜ்-கான திட்டத்தையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்ப்படுகிறது. தற்போது வரை எந்த நிறுவனமும் 5ஜி ரீசார்ஜ் திட்டத்தை வெளியிடவில்லை. 4ஜி திட்டத்தில் 5ஜி பயன்படுத்தப்படுகிறது.
ஆப்பிள், சாம்சங் உள்பட தொலைப்பேசி நிறுவனங்கள் 5ஜி பயன்படுத்துவதற்கான அப்டேட்களை நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெளியிட உள்ளன. தற்போது, ஏர்டெல் 5ஜி பிளஸ்(Airtel 5G Plus) 8 நகரங்களில் பயன்பாட்டில் உள்ளன. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களில் சேவை வழங்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ-வின் (Jio True 5G) மும்பை, டெல்லி, வாரணாசி மற்றும் கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில் வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“