பூமியில் ஏற்படும் மாற்றங்களான நிலநடுக்கம் , கடல் மட்டம் அதிகரிப்பு, பனிச்சிதைவு, எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் வகையில் இந்தியாவின் இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து நிசார் என்ற புதிய செயற்கைகோளை உருவாக்கி வருகின்றன.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து முதன்முறையாக செயற்கைகோள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் செப்டம்பர் 2014ல் கையெழுத்தானது. இந்த செயற்கைகோள் எஸ்யூவி அளவு உடையதாக இருக்கும். இதில் நாசா ரேடார் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தையும் இஸ்ரோ செயற்கைகோளை ஏவுதலுக்குரிய வேலையையும் செய்கின்றன.
இந்த செயற்கைகோளை வரும் 2021 ஆண்டில் சதீஷ் தவான் விண்வெளி மையம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்திய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இச்செயற்கைகோளின் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் மூலம் புவித் தட்டின் நகர்வுகளை ஆராய்ந்து பூமியில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக கண்டறியலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil