அண்மை காலமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த துறையில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது வாட்ஸ்அப் புதிதாக என்டரி கொடுத்துள்ளது. நாம் சாட் செய்யும் நபர்களுக்கு எளிதாக பணத்தை அனுப்பிவிடலாம். இதில், கேஷ்பேக் போன்ற ஆஃபர்கள் கிடைப்பதால், மக்களிடமும் நல்ல வரவேற்பை பெறுகிறது.
இதற்கிடையில், வாட்ஸ்அப் பணப்பரிவர்த்தனையை பயன்படுத்தி பல மோசடி சம்பவங்களிலும் மோசடிகாரர்கள் ஈடுபடுகின்றனர்.
உதாரணமாக, 8420509782 என்ற நம்பரில் இருந்து ஏர்டெல் பயனர் ஒருவருக்கு கால் வந்துள்ளது. அதில், இன்டர்நெட் பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். செல்போனில் பேசிய பெண், தனது அப்பா தான் ஏர்டெல் தொடர்பான விஷயங்களை கவனித்து வருகிறார். அவர் தற்போது வீட்டில் இல்லை. பின்னர் தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, அப்பெண்ணிடம் ‘401*8404975600’ இந்த நபரை நீங்கள் டயல் செய்தால், ஓரிரு நாளில் ஏர்டெல் சேவை மைத்திலிருந்து உங்களை தொடர்புகொள்வார்கள் என கூறியுள்ளார். அதனை உண்மை என நம்பிய அப்பெண், நம்பரை டையல் செய்துள்ளார்.
அவ்வளவு தான் 10 நிமிடத்தில் வந்த மெசேஜை பார்த்து, அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில், "புதிய சாதனத்தில் PIN மாற்றி அமைக்கப்பட்டுள்ளது," என மெசேஜ் வந்துள்ளது. ஓரிரு நொடியில், மொபைல் மற்றும் லேப்டாப்பில் வாட்ஸ்அப் லாக்அவுட் ஆகியுள்ளது.
“401” எண்ணை டயல் செய்த பிறகு, அனைத்து அழைப்புகளும் அந்த எண்ணுக்குத் திருப்பி விடப்படுவதை பயனர் உணர்ந்திருக்கிறார்.
பெண்ணின் வாட்ஸ்அப்பில் நுழைந்த மோசடிக்காரர்கள், உடனடியாக 40 முதல் 50 காண்டக்ட்களிடம் பணம் உதவு கேட்டு மெசேஜ் செய்துள்ளனர். அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றும், இன்று இரவுக்குள் பணத்தை திருப்பித் தருவதாக மெசேஜ் அனுப்பியுள்ளனர்.
இதை உண்மை என நம்பிய சிலர், 1000,2000 போன்ற தொகையை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் மோசடியிலிருந்து தப்பிக்கும் வழிகள்
- வாட்ஸ்அப்பில் 2 Step Authentication-ஐ பயன்படுத்த வேண்டும்.
- தெரியாத லிங்குகளைக் கிளிக் செய்ய வேண்டாம்
- "401" முதற்கொண்டு எந்த குறியீடு எண்களையும் டயல் செய்ய வேண்டாம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil