ஐஐடி கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி-ன் 58-வது பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர ராமமூர்த்தி, 1,962 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக அளவில் சிறந்து விளங்கிய 4 பேருக்கு பதக்கங்களையும் வழங்கினார்.
பத்மபூஷண் விருது பெற்ற பேட்மின்டன் வீராங்கனை சி.வி.சிந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திராவிட கழகத்தின் தலைவர் கி. வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில், " சென்னை அய்.அய்.டி. கல்வி நிறுவனத்தில் நேற்று (20.11.2021) நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்து - "நீராரும் கடலுடுத்த" என்ற மொழி வாழ்த்துப் பாடாமல் புறக்கணித்துள்ளனர். வேறு ஏதோ ஒன்று நுழைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவன நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் மொழி வாழ்த்துப் பாடப் பட வேண்டும் (அதற்கு அவையினர் எழுந்து நிற்க வேண்டும் என்பதும் மரபு) என்ற தமிழ்நாடு அரசு ஆணையை அலட்சியப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது
முதல் தடவையல்ல இப்படி தமிழ் வாழ்த்தைப் புறக்கணிப்பது; (சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது) முன்பும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் அங்கே நடந்தேறியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் ஆணையைப் பின்பற்றவோ- மதிக்கவோ IIT என்ற உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்க வல்லாண்மை தயாராக இல்லை என்பது ஏற்கத்தக்கதுதானா?
தமிழ்நாடு அரசும், கல்வியாளர்களும் உரிய கண்டனத்தைப் பதிவு செய்வது முக்கியமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil