விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பியின் பிறந்த நாளை கட்சி தொண்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதன் அங்கமாக கொண்டாடப்படும் மணிவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் 17-ம்தேதி அவருக்கு 60-வது பிறந்த நாளாகும். பிறந்த நாள் மணி விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை மணிவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
மாலை 4 மணிக்கு தொடங்கும் விழாவில் வாழ்த்துப் பொழிவு, கவிப்பொழிவு, இசைப் பொழிவு, கருத்துப் பொழிவு என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. முதலில் நடைபெறும் வாழ்த்து பொழிவுக்கு சிபிஐ-யின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை, ரவிக்குமார் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ். பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோர் நிகழ்ச்சியை முன்னிறு நடத்துகின்றனர்.
முதன்மை செயலாளர்கள் ஏ.சி.பாவரசு, உஞ்சை அரசன், தலைமை நிலைய செயலாளர்கள் தகடூர் தமிழ்செல்வன், பாலசிங்கம், இளஞ்சேகுவேரா ஆகியோர் வரவேற்கிறார்கள்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.