கடந்த 2014-ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகிய 'கோலிசோடா' படம் வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. கோயம்பேட்டில் இருக்கும் பசங்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொன்ன அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் விஜய் மில்டன். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் முக்கியமான ரோலில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.
இந்த படத்துக்கு விஜய் மில்டனே ஒளிப்பதிவு செய்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். தீபக் படத்தொகுப்பாளராகப் பணிபுரியும் இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டார். தற்போது இந்தப் படத்தின் ஆடியோ டீசரை ட்விட்டரில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆடியோ டீசருக்கு கெளதம் வாசுதேவ் மேனன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். ஜனவரியில் இப்படம் ரிலீசாகும் என தெரிகிறது.