பாகிஸ்தானுக்கு எதிரான 1971-ல் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றிபெற்றதன் ஐம்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ராஜஸ்தானின் பிகானேர் நகரில் உள்ள அனுப்கரில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 180 கிலோமீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டனர் . டிசம்பர் 13-14 தேதிகளில் நடைபெற்ற இந்த பந்தயம் 11 மணி நேரத்தில் நிறைவடைந்து. பாதுகாப்பு படையில் உள்ள 930 ஆண்கள் மற்றும் பெண்கள் இதில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வீரரும் சுமார் 400 முதல் 500 மீட்டர் தூரத்தைக் கடந்தனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இதனை தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி கொண்டார்.
அனுப்கரில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 1971 போரில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, இந்தியா-பாகிஸ்தான் போரின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், பொன்விழா வெற்றி ஜோதியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று ஏற்றி வைத்தார்.
1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரில், பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி, இந்திய ராணுவம் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. இது பங்களாதேஷ் உருவாக வழிவகுத்தது. இரண்டாம் உலகம் போருக்குப்பின், ராணுவ வீரர்கள் மிகப் பெரிய அளவில் சரணடைந்தது இந்தப் போரில்தான் நடந்தது.
1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷை விடுவிப்பதில் இந்தியாவின் வெற்றியைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 அன்று நடைபெறும் விஜய் திவாஸ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது இருந்தது.