ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் மூதாட்டி ஒருவர் பஸ் ஏறும்போது தவறவிட்டுச் சென்ற மருந்தை காவலர் ஒருவர் அவ்வழியே சென்ற பைக்கரிடம் கொடுத்து பேருந்தில் செல்லும் மூதாட்டியிட ஒப்படைக்க கூறியுள்ளார். அந்த பைக்கரும் வேகமாக சென்று பஸ்ஸை நிறுத்தி மருந்து பாட்டிலை உரிய மூதாட்டியிடம் ஒப்படைத்துள்ளார். பைக்கர் அருண் இந்த நிகழ்வை வீடியோவாக சமுக ஊடகங்ளில் வெளியிட வைரலாகி வருகிறது.
மருந்து பாட்டிலை தவறவிட்டு சென்ற மூதாட்டியிடம் மருத்து பாட்டிலை ஒப்படைக்க முயற்சி எடுத்த காவலருக்கும் பைக்கருக்கும் ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள், டாக்டர்கள், சாமானியர்கள் என பல தரப்பினரும் பாரட்டுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பைக்கர்கள் என்றால் இவர்கள் பல நூறு கிலோமீட்டர்கள் பைக்கிலேயே மிகவும் பாதுகாப்பாக பயணம் செய்பவர்கள். அதோடு, சிலர் தாங்கள் பைக்கில் பயணம் செய்வதையும் அப்போது நடக்கும் சுவாரஸியமான நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அப்படியான ஒரு பைக்கர்தான் பெங்களூருவைச் சேர்ந்த அருண் குமார் மூல்யா. இவர் பெங்களூருவில் ஐடி துறையில் பணிபுரிகிறார். குஜராத், ராஜஸ்தான், லே, லடாக் என பல மாநிலங்களுக்கு பைக்கிலேயே பயணம் செய்துள்ளார். தனது பைக் பயணங்களை AnnyArun என்று யூடியூப் சேனலில் பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் அருண் குமார் புதுச்சேரியில் இருந்து கேரளாவுக்கு தனுஷ்கோடி வழியாக செல்லும்போதுதான் இந்த சுவாரசியமான நெகிழ்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
பைக்கர் அருண்குமார், ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு போலீஸ்காரர் கை காட்டி மறித்து நிறுத்தியிருக்கிறார். அவர் ஒரு மருந்து பாட்டிலை கொடுத்து, இங்கே பஸ் ஏறும்போது ஒரு பாட்டி தவறி விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அவர் முன்னாள் போகிற ஒரு பேருந்தில்தான் போகிறார். வேகமாக போனால், அந்த பேருந்தை நிறுத்தி கொடுத்துவிடலாம் என்று கூறி அவரிடம் அந்த மருந்து பாட்டிலை கொடுக்கிறார். அதோடு, பேருந்தின் அடையாளத்துக்கு அந்த வழியாக வந்த ஒரு பேருந்தைக் காட்டி இதோ வருகிறதே பஸ் போலதான் பச்சை கலரில் இருக்கும் என்று கூறுகிறார்.
மருந்து பாட்டிலை வாங்கிக்கொண்ட பைக்கர் அருண் குமார் பைக்கில் வேகமாக சென்று ஓடும் பஸ்ஸை விரட்டிப் பிடித்து அந்த மருந்து பாட்டிலை பேருந்தில் உள்ள பாட்டியிடம் ஒப்படைக்கிறார். பின்னர், தனது பைக் பயணத்தை தொடர்கிறார். இது எல்லாமே, அருண் உடலில் பொருத்தியிருந்த கேமிராவில் பதிவாகியுள்ளது. அருண் குமார், இந்த சம்பவத்தின் வீடியோவை தொகுத்து, தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து, அருண் குமார் காவலரிடம் இருந்து பெற்று ஓடும் பஸ்ஸை விரட்டிப் பிடித்து மருந்து பாட்டிலை பாட்டியிடம் ஒப்படைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி கவனத்தை பெற்றது. பைக்கர் அருண் குமார் செய்த உதவிக்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
பைக்கர் அருண் குமார், பாட்டி தவறவிட்டு சென்ற மருந்து பாட்டிலை காவலரிடம் வாங்கிக்கொண்டு ஓடும் பஸ்ஸை விரட்டிச் சென்று பிடித்து பாட்டியிடம் ஒப்படைத்த வீடியோவை டாக்டர் அஜயிதா பகிர்ந்துள்ளார். அவர் அந்த வீடியோவைப் பற்றிக் குறிப்பிடுகையில், “உங்களுடைய சிறிய கருணை மிக்க நடவடிக்கை மற்றவர்களுக்கு பெரியதாக இருக்கலாம். பைக்கர் அருண் குமார் ஒரு போலீஸ்காரரால் நிறுத்தப்படுகிறார். பின்னர், அவர், ஏதேச்சையாக ஒரு மூதாட்டி பேருந்து ஏறும்போது மருந்து பாட்டிலை தவறவிட்டுவிட்டார். அதை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கிறார்.” என்று சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
மருந்து பாட்டிலை தவறவிட்ட மூதாட்டியிடம் மருந்தை ஒப்படைக்க வேண்டும் என்று முயற்சி எடுத்த காவலர் கிருஷ்ணமூர்த்தியையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த வீடியோவைப் பார்த்த ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுதா ராமென், “மூதாட்டி தவறவிட்ட மருந்தை ஒப்படைப்பதற்காக முயற்சி மேற்கொண்ட நல்ல இதயங்களுக்கு பாராட்டுதல்கள். தமிழ்நாடு போலீஸ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பைக்கர் அருண் குமார் ஆகிய இருவரின் தயவான சிறிய செயல் நம் வாழ்க்கையை அழகாக மாற்றும் என்பதைக் காட்டுகிறது.” என்று குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
அதே போல, இந்த வீடியோவைப் பார்த்த, எஸ்.பி அர்ஜுன் சரவணன், இராமநாதபுரம் ஏர்வாடி பகுதியில் ஒரு பாட்டியம்மா பஸ் ஏறும் போது மருந்தை மறந்துவிட்டு சென்ற நிலையில் பைக் ஓட்டுநர் அருண் குமார் மூலம் சேர்த்துள்ளார். காவல் பணியே தான் செய்ததாக கூறி எனது பாராட்டிற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வாழ்த்துகள் கிருஷ்ணமூர்த்தி” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பஸ் ஏறும்போது ஒரு பாட்டி தற்செயலாக தவறவிட்ட மருந்து பாட்டிலை ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு காவலரும் ஒரு பைக்கரும் தயவுடன் மேற்கொண்ட முயற்சி ஒரு சிறிய விஷயம்தான். ஆனால், எவ்வளவு அழகானது. இப்படியான, சின்ன சின்ன கருணைமிக்க செயல்கள் அனைவரின் வாழ்க்கையையும் அழகாக்கிவிடும்.
பைக்கர் அருண்குமார் வெளியிட்ட இந்த விடீயோவைப் பார்த்த ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், டாக்டர் மற்றும் நெட்டிசன்கள் என பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஓடும் பஸ்ஸை துரத்திப் பிடித்து… தமிழக போலீசும் பைக் வீரரும் மகத்தான உதவி செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.