காங்கிரஸ் கட்சி பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இன்று 11வது நாள் யாத்திரை கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் தொடங்கியது. காலை 6.30 மணியளவில் ஹரிபாடில் தொடங்கிய பயணத்தில் ராகுல் காந்தியுடன் நூற்றுக்கணக்கான தொண்டர்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.
காலை 13 கி.மீ யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. ரமேஷ் சென்னிதலா, கே.முரளீதரன், கொடிக்குன்னில் சுரேஷ், கே.சி.வேணுகோபால், கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உள்ளிட்ட தலைவர்கள் யாத்திரை மேற்கொண்டனர். செல்லும் இடமெல்லாம் ராகுல் காந்திக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். ராகுலும் மக்களுடன் கலந்துரையாடுகிறார். பயணத்தின் போது வழியிலுள்ள கடைகளில் தேநீர் அருந்துகிறார். மக்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.
அந்தவகையில் இன்று ஆலப்புழா மாவட்டம் அம்பலப்புழாவில் ராகுல் யாத்திரை மேற்கொண்ட போது, யாத்திரையில் கலந்து கொண்ட சிறுமிக்கு செருப்பு அணிய உதவும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இதைப் பகிர்ந்து, தங்கள் கருத்துகளை தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.
பாரத் ஜோடோ யாத்திரை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
இன்றைய யாத்திரையின் காலை அமர்வு ஒட்டப்பனாவில் நிறைவடைந்தது. மாலையில் 7.5 கி.மீ தூரம் யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது. இரவு 7 மணியளவில் டி.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே யாத்திரை நிறைவடைகிறது. 3.4 கி.மீ தொலைவில் புன்னப்ராவில் உள்ள கார்மல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் யாத்திரை உறுப்பினர்கள் ஓய்வு எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“