எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தனக்கு சளி, காய்ச்சல் கொரொனா அறிகுறி தெரிகிறது. அதனால், மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுக்கிறேன் என்று எழுதியுள்ள சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரொனா என்னும் வைரஸ் பாதிப்புக்கு இதுவரை அந்நாட்டில் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். சீனாவுக்கு வெளியே ஈரான், இத்தாலி உள்ளிட்ட மற்ற நாடுகளில் கொரொனா வைரஸ் பாதிப்பு பலி எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது.
இந்த புதிய கொரொனா வைரஸ் உலக நாடுகளை மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரொனா வைரஸ் தொற்றால் இதுவரை 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொரொனா வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதால் கேரளாவில் மக்கள் கூடும் திரையரங்குகளை மார்ச் 31 வரை மூட உத்தரவிட்டுள்ளது. அதே போல, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மார்ச் மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. பெங்களூருவில் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரொனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் தும்மினால், இருமினால் அதன் மூலம் அந்த வைரஸ் காற்றில் எளிதில் பரவக்கூடியதாக இருப்பதால் தமிழக பள்ளிக்கல்வித் துறையும் கொரொனா காய்ச்சல், சளி, இருமல், தும்மல் போன்ற கொரொனா அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்கவும் என்று சுற்றறிக்கை அனுப்பியது.
இந்த நிலையில், சென்னை, முகலிவாக்கம் அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் தனக்கு கொரொனா அறிகுறி உள்ளதாகவும் அதனால், தான் நீண்ட விடுப்பு எடுத்துக்கொள்கிறேன் என்று தலைமை ஆசிரியருக்கு எழுதியுள்ள விடுப்பு விண்ணப்பம் சமூக ஊடகங்களி வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதைவிட, அவன் கடைசியாக விடுத்த ஒரு வேண்டுகோள்தான் பலரையும் சிரிக்கவைத்துள்ளது.
எட்டாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன் எழுதிய லீவ் லெட்டரில், “ஐயா, நான் தங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். தற்போது நாட்டில் கொரொனா வைரஸ் பரவி வருகிறது. அது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்கு சளி காய்ச்சல், அறிகுறி தெரிகிறது. எனவே மற்ற மாணவர்கள் நலன் கருதி நான் நீண்ட விடுப்பு. மேலும் அரசாங்கமும் சுற்றறிக்கை செய்துள்ளது. சளி, காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள் வரவேண்டாம் என்பதை மேற்கோல் காட்டி, ஆகையால், நான் மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாட்களை வருகை நாட்களாக பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று எழுதியுள்ளான்.
அரசுப் பள்ளி மாணவன் எழுதியதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள இந்த லீவ் லெட்டரை படிப்பவர்கள் பலரும் தாங்கள் பள்ளி படிக்கும் காலத்தில் பள்ளிக்கூடம் போகாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் சாக்கு சொல்லி லீவ் லெட்டர் எழுதுவார்களோ அவையெல்லாம் நினைவுக்கு வந்து சிரிக்கவே செய்கிறார்கள். அதிலும் இந்தச் சிறுவன், தனது விடுப்பு நாட்களை வருகை நாட்களாக பதிவு செய்துகொள்ளும்படி கேட்டிருப்பது பலரையும் சிரிக்க வைத்துள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு இவ்வளவு அறிவா என்று அந்த மாணவன் எழுதிய லீவ் லெட்டர் கொரொனா அளவுக்கு வைரல் ஆகிவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.