பொது இடங்களில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை பலரும் அருவருப்பாக கடந்துபோகும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. ஆனால், தாய்ப்பால் புகட்டுதல் இயற்கையான ஒன்றுதான் என்பதை நிரூபிக்கும் வகையில், க்ரிஹலஷ்மி (Grihalakshmi) எனும் மலையாள இருவார இதழில் மாடல் ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் புகைப்படம் அட்டைப்படமாக வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த அட்டைப்படத்தில், “தாய்மார்கள் கேரளாவிடம் கூறுகின்றனர்: “தயவுசெய்து எங்களை உற்றுப்பார்க்காதீர்கள்; நாங்கள் பால் கொடுக்க வேண்டும்”, என எழுதப்பட்டிருந்தது.
இந்த அட்டைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் மாடல் கிலு ஜோசஃப், கவிஞர், எழுத்தாளர், விமான பணிப்பெண் என பன்முகத் தன்மை கொண்டவர். இதுகுறித்து, கிலு ஜோசஃப் தெரிவிக்கையில், “தாய்ப்பால் புகட்டுவதை பாலியல் ரீதியாக தொடர்புப்படுத்தி பார்ப்பதுதான் தவறி. அது ஒரு அழகான விஷயம். இதை ஏன் தவறாக நினைக்கிறீர்கள்? உங்கள் குழந்தைக்கு பால் புகட்டினால், எந்த கடவுள் கோபமடையும்”, என கூறினார்.
”நான் என் உடல் குறித்து மிகவும் பெருமையடைகிறேன். எனக்கு எது சரியோ அதைத்தான் நான் செய்கிறேன். அதனால், இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கு முன் நான் சற்றும் யோசிக்கவில்லை”, எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு அவரது குடும்பத்தினர் யாரும் சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.