ராணுவ வீரர்கள் வீடு திரும்புவது எப்போதுமே உணர்ச்சிப் பூர்வமாக இருக்கும்.
’எவ்வளவு நாள் கழித்துப் பார்க்கிறோம் என்ற ஏக்கம், சீக்கிரம் பணிக்கு திரும்பிவிடுவோமே என்ற வருத்தம்’ என எல்லாம் கலந்த உணர்வுகளின் கலவையாக அந்தத் தருணம் இருக்கும்.
இப்படியான ஒரு சம்பவம், அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் டென்னேஸே நகரில் டேக்வோண்டோ எனும் கொரிய தற்காப்பு கலையைக் கற்றுக் கொண்டிருக்கிறான் 9 வயது சிறுவன்.
குத்துச் சண்டை போலவே இருக்கும் அந்தக் கலையை, தனது 2 கண்களையும் கட்டிக் கொண்டு எதிராளுடன் மோதுகிறான். ஆனால் அவனுடன் மோதியது, ராணுவ வீரரான அவனது தந்தை.
சண்டைப் போட்டுக் கொண்டிருந்தவனை ஊக்குவிக்கும் விதமாக ‘கமான்’ என சொல்கிறார் அவனது தந்தை. முதலில் இது யார் என்ற கேள்வியில் நிலை தடுமாறும் அந்த சிறுவன் பின்பு குரலை நன்கு கவனிக்கிறான்.
ஒரு கட்டத்தில் கண்களை கட்டியிருந்த துணியை விலக்கிப் பார்த்தால், அவனுக்கு ஆனந்த அதிர்ச்சி. ஓடிச் சென்று அவனது தந்தையை கட்டித் தழுவுகிறான். தந்தை அவனை தூக்கிக் கொஞ்சுகிறார்.
உணர்ச்சி மிகுதியால் அவன் அழுகிறான், மகன் அழுவதைப் பார்த்து தந்தையும் அழுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பார்க்கும் நம் கண்களையும் பதம் பார்க்கிறது.