இந்திய கிரிக்கெட் அணியின் அதிதீவிர ரசிகரான சுதிர் கவுதமை அழைத்து, முன்னாள் கேப்டன் தோனி விருந்து கொடுத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கிரிக்கெட் மட்டுமில்லை எந்தவொரு விளையாட்டு, சினிமா எதை எடுத்துக் கொண்டாலும் ரசிகர்கள் இல்லை என்றால் அதன் பலமே குறைவு தான். ஒரு போட்டிக்கு எவ்வளவு ரசிகர்கள் கூடுகிறார்கள் என்பதைப் பொறுத்து தான் அந்த போட்டியின் ஒட்டுமொத்த பலமே தீர்மானிக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் அதி தீவிர ரசிகரும், இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கரின் உயிர் ரசிகருமான சுதிர் கவுதமை தெரியாத கிரிக்கெட் வீரர்கள் எவருமே இருக்க மாட்டார்கள். இந்திய அணி விளையாடும் மைதானத்திற்குச் சென்று உடற்முழுவதும் இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தை பூசிக்கொண்டு சச்சின் பெயரை உடலில் எழுதிக் கொண்டு அவரை உற்சாகமூட்டுவார்.
தற்போது, இந்திய அணி எங்கு விளையாட சென்றாலும், அந்த மைதானத்திற்கு சுதிர் சென்று வீரர்களை உற்சாக மூட்டும் வகையில் விதவிதமான முயற்சிகளை செய்து வருகிறார். இப்படி ஒரு ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ,முன்னாள் கேப்டன் டோனி சுதிரை தனது பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று விருந்து வைத்து அசத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை சுதிர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தில் சுதிர், டோனி மற்றும் சாக்ஷி டோனி உடன் செல்ஃபீயும் எடுத்துள்ளார். இதைப் பார்த்த டோனி ரசிகர்கள் பலர், ”தல இந்த வாய்ப்பை எங்களுக்கு எப்ப தர போகிறீர்கள் ?” என்று உற்சாகத்துடன் கேட்டு வருகின்றனர்.