சிக்காகோவை சேர்ந்த பெண் செய்தி தொகுப்பாளர் ஒருவர் எட்டு மாதங்கள் கர்ப்பமாக உள்ள நிலையில், அவர் அணிந்த உடை அருவருக்கத்தக்கதாக உள்ளது என சிலர் அவருக்கு தகவல் அனுப்பியதற்கு தக்க பதிலடியை அந்த செய்தி தொகுப்பாளர் அளித்தார்.
FOX 32 தொலைக்காட்சியின் செய்தி தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் கிரிஸ்டன் நிக்கோல். இவர் தற்போது எட்டு மாதங்கள் கர்ப்பமாக உள்ளார். ஒருநாள் தான் அடிக்கடி அணியும் நீல நிற உடையை அணிந்துகொண்டு செய்தி வாசித்தார். இந்நிலையில், கர்ப்பமாக உள்ள நிலையில் குறிப்பிட்ட அந்த ஆடையை அணிந்துகொண்டு தொலைக்காட்சியில் தோன்றியது அருவருக்கத்தக்கதாக இருந்தது என மூன்று பெண்கள் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினர். அவர்களுக்கு தகுந்த பதிலடியை முகநூலில் பதிவிட்டார்.
அந்த பதிவில், “நான் இந்த ஆடையை மாதத்திற்கு ஒருமுறையாவது அணிவேன். அதனால், யாருக்கும் எந்தவித பிரச்சனையும் இருந்ததில்லை. இப்போது எட்டு மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் இந்த ஆடையை அணிந்தேன். இப்போது அருவருப்பாக உள்ளதா? இந்த மின்னஞ்சல் அனுப்பிய மூன்று பெண்களும் தங்கள் நேரத்தை சிறப்பான காரியத்திற்காக செலவிடுங்கள். யாரையாவது பாராட்டுங்கள். நல்லதை செய்யுங்கள். நான் ஆரோக்கியமாக, மன அழுத்தம் இல்லாத கர்ப்ப காலத்தை அனுபவித்து வருகிறேன். நான், என்னுடைய கணவர் மற்றும் மகன், எங்கள் குடும்பத்திற்கு புதிதாக வரவிருக்கும் குழந்தையை எதிர்நோக்கி ஆவலுடன் இருக்கிறோம்.”, என பதிவிட்டார்.
மேலும், அந்த ஆடையின் மீது வெள்ளைநிற நீள உடையை மூடிகொண்டு அந்த புகைப்படத்தையும் அவர் பதிவிட்டார். அந்த பதிவில், “இந்த மாதிரி காலையில் வேலைக்கு சென்றால்” இது நல்லா இருக்கா? சும்மா விளையாடினேன். ”, என பதிவிட்டார்.