மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள் என எல்லா உயிர்களுக்கும் உணர்வுகள் பொதுவானவை என்பதை நிரூபிக்கும் விதமாக, இறந்த ஜோடி மயிலைப் பிரிய மனமில்லாமல் பின் தொடரும் துணை மயிலின் உருக்கமான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
பொதுவாக மனித உறவுகள் உணர்வுகளால் கட்டப்பட்டவை. அதனாலேயே மனிதன் ஒரு சமூக விலங்கு என்று அழைக்கபடுகிறான். மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகளுக்கும் அத்தகைய உணர்வுகள் உள்ளது என்பதை அவ்வப்போதைய நிகழ்வுகள் குறிப்பிடுவதாக இருக்கும்.
அந்த வகையில், வனத்தில் ஜோடி மயில்களில் ஒரு மயில் இறந்துவிட அதை 2 பேர் அடக்கம் செய்ய தூக்கிச் செல்கின்றனர். ஆனால், இறந்த மயிலை பிரிய மனமில்லாத துணை மயில் பின்னாலேயே நடந்து செல்கிறது. இந்த வீடியோ பார்பவர்களின் மனதை உருக்குவதாக உள்ளது.
ஒரு மயில், தனது ஜோடி மயிலின் மரணத்திற்குப் பிறகு, தனது நீண்ட கால துணையை விட்டு வெளியேற விரும்பவில்லை. மனதை தொடும் வீடியோ என்று ஐ.எஃப்.எஸ் வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த உருக்கமான நிகழ்வு ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், கச்சேரா பகுதியில் 4 ஆண்டுகளாக இரண்டு மயில்கள் ஒன்றாக சுற்றித் திரிந்துள்ளன. இரண்டு மயில்களும் எப்போதும் இணை பிரியாத மயில்களாக இருந்துள்ளன. இந்த நிலையில் திடீரென ஒரு மயில் இறந்துள்ளது. இதையடுத்து, இறந்த மயிலை அடக்கம் செய்வதற்காக இரண்டு பேர் அதை தூக்கிச் சென்றுள்ளனர்.
இறந்த மயிலைத் தூக்கிச் செல்வதைப் பார்த்த, துணை மயில், அதை தாங்கிக்கொள்ள முடியாமல், தூக்கிச்செல்லப்படும் மயிலின் பின்னாலேயே சென்றுள்ளது. ஜோடி மயிலின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தூக்கிச் செல்லப்படும் இறந்த மயிலின் பின்னால் மற்றொரு மயில் செல்லும் காட்சி பார்ப்பவர்களைக் கண்கலங்க வைக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"