புதிய மோட்டார் வாகன சட்டம் செப்.1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்ந்துள்ளது. குடிபோதையில் பைக் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம், சிறுவர்கள் கார் ஓட்டினால் பெற்றோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குர்கானில், வாகன சோதனையில் சிக்கிய தினேஷ் மதன் என்பவருக்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து போலீசார் ரூ.23,000 அபராதம் விதித்தனர். லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக ரூ.5 ஆயிரம், வாகனப்பதிவு சான்றிதழ் இல்லாததற்காக ரூ.5 ஆயிரம், டிரைவிங் லைசன்ஸ் இல்லாததற்காக ரூ.2 ஆயிரம், காற்று மாசுபாடு ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம், ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக ரூ.1,000 என மொத்தம் 23 ஆயிரம் ரூபாய் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ‘சலான்’ வழங்கப்பட்டது. அவரது ஸ்கூட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் வாகனச் சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருக்க, அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள், வண்டியை நிறுத்திவிட்டு, தள்ளிக் கொண்டே போலீஸை கடந்து செல்கின்றனர். ஹெல்மெட், ஆவணங்கள் இல்லாமல் வண்டியை ஓட்டினால் தானே பிடிக்க முடியும், வண்டியை தள்ளிக் கொண்டு போனால் எப்படி பிடிக்க முடியும் என்று நினைத்தார்களோ என்னவோ, பல டூ வீலர் ஓட்டிகள் வண்டியை தள்ளிக் கொண்டே சென்றனர்.
இதனால் போலீசார் அவர்களை கேள்விக் கேட்க முடியாமல் நிற்கும் வீடியோ செம வைரலாகி வருகிறது. ஆனால், எந்த இடத்தில் இந்த வீடியோ படம் பிடிக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.