சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய் மருத்துவர் என அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயசந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
5 ரூபாய் மருத்துவருக்கு மோடி புகழாரம் :
சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் 5 ரூபாய்க்கு ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்த டாக்டர் ஜெயசந்திரனின் புகழ், பிரதமர் மோடி வரை சென்றடைந்துள்ளது.
கடந்த கடந்த 45 ஆண்டுகள் மருத்துவத்தை தனது உயிர் நாடியாக நினைத்து வெறும் 5 ரூபாய்க்கு ஏழை நோயாளிகளுக்கு சிகிக்சை பார்த்து வந்த டாக்டர் ஜெயசந்திரன் (71) கடந்த 19 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரின் மறைவு ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அரசு பள்ளியில் பயின்று சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற நிஜ மெர்சல் நாயகன் டாக்டர் ஜெயசந்திரன் இதுவரை செய்து வந்த சேவை தன்னிகரற்றது.
1971 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் கிளினிக் ஒன்றை தொடங்கிய ஜெயசந்திரன் ஆரம்பத்தில் இரண்டு ரூபாய்க்கு சிகிச்சையளித்து வந்தார். காலப்போக்கில் அது ஐந்து ரூபாயாக மாறியது.
ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவைப் புரிந்த ஜெயசந்திரனை ராயபுரம் பகுதி மக்கள்,தந்தையாகவும், தனது வீட்டில் ஒருவராகவே பார்த்தனர். இவரது இறப்பை வடசென்னை மக்கள் பேரிழப்பாக கருதுகின்றனர். 5 ரூபாய் மருத்துவர் என்று அன்போடு அழைக்கப்பட்ட அவருக்கு இப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
read more... வெறும் 5 ரூபாயில் எத்தனையோ நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றியவர்
5 ரூபாய் மருத்தவர் மரணத்திற்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன், ராமதாஸ், தமிழிசை செளந்திரராஜன் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் செலுத்தினர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 5 ரூபாய் மருத்துவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில், டாக்டர் ஜெயச்சந்திரன் ஒரு ஹீரோவாக திகழ்ந்தார். அவரது வாழ்க்கை மற்றவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Chennai based Dr S Jayachandran is a hero. His was a life purely for the betterment of others. https://t.co/CVlJiFmPZ7
— Narendra Modi (@narendramodi) 21 December 2018
அதே போல் தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “5 ரூபாய் டாக்டர் என்று அழைக்கப்பட்ட ஜெயச்சந்திரன் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
கடந்த 1971-ல்ராயபுரத்தில் மருத்துவமனை தொடங்கி, அப்பகுதி மக்களுக்கு ரூ.2-க்கு சிகிச்சை அளித்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறந்த மருத்துவ சேவை வழங்கியுள்ளார். அவரது குடும்பத்துக்கும், ராயபுரம் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.