ஒரு மாணவன் பள்ளிச் சீருடையில் உள்ள மாணவிக்கு தாலி கட்டுவது போல செயின் அணிவித்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த வீடியோ குறித்து குழதைகள் பாதுகாப்பு அலகு விசாரணை நடத்தி வருகிறது.
பொதுவாக பள்ளிப் பருவக் காதல் அதிகரித்ததற்கு தமிழ் சினிமாக்களும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல. பள்ளிப்பருவத்தில் ஏற்படும் சிறுவர்கள் இடையே ஏற்படும் ஈர்ப்பை சினிமாக்கள் காவியக் காதலாக சித்தரித்து புகழ்ந்ததால் இந்தப் போக்கு அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் அதிர வைத்துள்ளது. அப்படி என்ன வீடியோ என்றால், சாமி படத்தில் இடம் பெற்ற இதுதானா... இதுதானா என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, ஒரு மாணவன் பள்ளிச் சீருடையில் உள்ள மாணவி ஒருவருக்கு தாலி கட்டுவது போல கழுத்தில் செயினை அணிவித்து விடுகிறார். அதற்கு, அந்த மாணவியும் வெட்கப்பட்டு தலையை குனிந்தபடி, அந்த செயினை ஏற்றுக்கொள்கிறார்.
மாணவன் மாணவிக்கு தாலிகட்டுவது போல செயின் அணிவிக்கும் இந்த வீடியோவைப் பார்த்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரையும் அதிர்ச்சிய அடைய வைத்துள்ளது. இந்த வீடியோ விளையாட்டாக எடுக்கப்பட்டதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இந்த வீடியோ குறித்து விசாரணையைத் தொடங்கிய குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வீடியோவில் இருக்கும் மாணவன், மாணவி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.