கடலில் எப்படியோ உடலில் கயிறு சுற்றிக்கொண்ட சுறா மீன் ஒன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களைத் தேடிவந்து கயிறை விடுத்துக்கொண்டு சென்ற சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
மலேசியாவில் மீனவர்கள் ஒரு படகில் வழக்கம் போல கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது அவர்கள் அருகே ஒரு சுறா வருவதைப் பார்த்த மீனவர்கள் என்ன என்று கவனித்தபோது அந்த சுறாவின் உடலில் எப்படியோ ஒரு தடிமனான கயிறு சிற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்தனர். அந்த கயிறு சுறாவுக்கு அசௌகரியமாகவும் நீந்துவதற்கு சிரமாகவும் இருப்பதை மீனவர்கள் கண்டனர்.
மீனவர்களின் படகு அருகே வந்த சுறா மீன் எதுவும் செய்யாமல் பக்கத்திலேயே நின்றுள்ளது. சுறாவின் உடலில் கயிறு சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்த மீனவர்கள் சுறாவுக்கு உதவ முயற்சி செய்தனர். ஒரு பெரிய கொக்கியை எடுத்து சுறாவின் உடலில் சுற்றியிருந்த கயிற்றில் மாட்டி இழுந்தனர். மற்றொருவர் ஒரு கத்தியை எடுத்து அந்த கயிறை அறுத்து கயிற்றின் பிடியிலிருந்து சுறாவை விடுவித்தார். கயிற்றிலிருந்து விடுபட்ட சுறா அங்கிருந்து செல்ல மீனவர்கள் அதற்கு பை..பை.. சொல்லி வழியனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் படகில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து அதை டுவிட்டரில் பகிர அது இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகி உள்ளது.
கடலில் ஒரு சுறா மீன் தனது உடலில் சுற்றிய கயிறை விடுவிப்பதற்காக மீனவர்களை தேடிவந்து கயிறை விடுவித்துக்கொண்டு சென்ற நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த சிலர் அந்த சுறாவுக்கு எவ்வளவு அறிவு பாருங்கள் என்று கூறி சுறாவையும் மீனவர்களையும் பாராட்டி வருகின்றனர்.