கொரோனா தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் செல்வோர் கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும், என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாஸ்க் அணிந்து செல்லாவிட்டால், 200 ரூபாய் அபராதமும், வழக்குப்பதிவும் செய்யப்படும் என அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தஞ்சையில், கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் முகக் கவசம் அணியாமல் வந்துள்ளார். அந்த பெண்ணை இடைமறித்த காவல்துறையினர், முகக் கவசம் எங்கே என கேட்டுள்ளனர். அவர் பதில் ஏதும் கூறவில்லை. உடனே, காவல்துறையினர் முகக் கவசம் அணியாததற்காக 200 ரூபாய் அபராதம் கட்டுமாறு அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளனர்.
அதற்கு அந்த பெண், பெண் காவலரிடம் ‘இத்துணூண்டு மாஸ்க்குக்கு 200 ரூபாய் கட்டணுமா, உங்களுக்கெல்லாம் அசிங்கமா இல்லையா’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு பெண் காவலர், இதெல்லாம் கலெக்ட்டர்கிட்ட கேளுமா என கூற, ‘யோவ் கலெக்டர கூப்டு, அவன நானே கேக்குறேன். எவனா இருந்தாலும் மானத்த வாங்கிடுவேன் என ஹீரோயிசம் செய்ய முற்பட்ட கண்ணில் இருந்த கண்ணாடியை ஆவேசமாக கலட்டி அலப்பறையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த மற்ற காவலரையும் அந்த பெண் விட்டு வைக்கவில்லை. அவரிடமும், ‘வீடியோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுவியொ போடு, ஜெயில்ல போடுவியோ போடு,’ என ரவடியிசம் செய்துள்ளார். மேலும், ‘மாநகரம்’ திரைப்படத்தில் வடிவேலுவின் நானும் ரவுடி தான் என்ற டயலாக்கையும் விட்டு வைக்காத அந்தப் பெண், ஆவேசமாக தனது சாலை கலட்டி சுழற்றி ‘நானும் ரவுடி தான் பாத்துக்க’ என மிரட்டி உள்ளார்.
இதனையடுத்து, பொது இடத்தில் விதிமுறைகளை மீறுதல், ஆட்சியர் மற்றும் காவல்துறையினரை தரக்குறைவாக பேசுதல் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக அந்த பெண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.