விமானம் புறப்படுவதற்கு முன் பயணிகளுக்கு ஏர் ஹோஸ்ட்ஸ் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்குவது வழக்கம். அதேபோல தமிழகத்தில், அரசு பேருந்து நடத்துனர் ஒருவர், பயணிகளுக்கு அறிவுரை வழங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Advertisment
மதுரையில் இருந்து கோவைக்கு செல்லும் அரசுப்பேருந்தில், நடத்துனராக பணிபுரிபவர் சிவ சண்முகம். இவர் ஒவ்வொருமுறை பேருந்து புறப்படும் போது, அனைத்து பயணிகளுக்கும் தூய தமிழில், கனிவுடன் அறிவுரை வழங்குகிறார்.
தற்போது கொரோனா காலம் என்பதால், பேருந்தில் பயணம் செய்பவர்களை முக்கவசம் அணிய வலியுறுத்துகிறார். முகக்கவசம், சானிடைசர் இல்லாதவர்களுக்கு அதனையும் அவரே தருகிறார். நிறைய பேர் பேருந்தில் பயணம் போது சாப்பிட்டு, மீதி கழிவுகளை அப்படியே கீழே போட்டு விடுவார்கள். அப்படி செய்யாமல் இருக்க, பேருந்திலேயே குப்பைத் தொட்டியும் வைத்துள்ளார். அதில் குப்பைகளை போடும்படி பயணிகளை அறிவுறுத்துகிறார்.
பேருந்து பயணத்தின் போது பலருக்கு வாந்தி ஏற்படும். அவர்களுக்கு கொடுப்பதற்காக புளிப்பு மிட்டாய்களையும் வாங்கி வைத்திருக்கிறார். மேலும் பேருந்தில் பழுது ஏற்படுத்தாமல் பயணிக்க அனைவரையும் வலியுறுத்துகிறார்.
பிறகு சண்முகம், ஒவ்வொரு நிறுத்தத்துக்கும் உள்ள பயண கட்டணம் குறித்து பயணிகளுக்கு தெளிவாக விளக்குகிறார்.
இப்படி அனைத்து அறிவுரைகளையும், வழங்கிய பிறகு, இறுதியாக சண்முகம்’ அனைவருக்கும் பயணம் இனிதாக அமையும் படியும், அவர்கள் செல்லும் விஷயம் சிறப்பாக நடக்கும்படி வாழ்த்துக்களை கூறுகிறார். அவரது பேச்சை கேட்ட பயணிகள் அனைவரும் அவருக்கு கைத்தட்டி பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர்.
இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
பேருந்தில் பயணம் செய்பவர்களிடம் கடிந்து விழும் சில நடத்துனர்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில், தன் பணியை அர்ப்பணிப்புடன் செய்யும் அரசு பேருந்து நடத்துனர் சிவ சண்முகத்துக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “