ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றில் முக்கியமான அனைத்தும் இணையதளத்தில் வைரலாகி வருவது வழக்கம். அதுபோல் இன்றும் பல விவகாரங்கள் அதிமாக பரவப்பட்டது. வார்னர்க்கு தடை, மாணவர்களுக்கு மறு தேர்வு, அமைச்சர் நவநீதகிருஷ்ணன், உயிர் குடிக்கும் ஸ்டெர்லைட் மற்றும் கிரிகெட் நாயகன் விராட் கோலி ஆகியவையே இன்று அதிகம் பேசப்பட்டன. இது குறித்த செய்தி விவரங்களைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. #DavidWarner
பந்தைச் சேதப்படுத்திய வழக்கில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மர்ம பொருள் கொண்டு ஆஸ்திரேலிய தொடக்க வீரர் பேன்க்ராஃப்ட் பந்தைச் சேதப்படுத்த, எங்களது வழிகாட்டுதலின் பேரில் தான் அவர் பந்தை சேதப்படுத்தினர் என கேப்டன் ஸ்மித்தும், துணை கேப்டன் வார்னரும் உண்மையை ஒப்புக் கொண்டனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிகெட் வாரியம் அவர்கள் இருவரையும் அனைத்துப் போட்டிகளில் இருந்தும் ஓராண்டு தடை செய்தது. இதில் பந்தை சேதப்படுத்திய பேன்க்ராஃப்ட்டிற்கு 9 மாதங்கள் தடை விதித்துள்ளது.
2. #CBSE
இணையதளத்தில் வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் 12ம், 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மறு தேர்வு நடக்கும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளின் 10ம் மற்றும் 12ம் வகுப்பு சமீபத்தில் நடந்து முடிந்தன. இந்தத் தேர்வு நடைபெற்று வந்த போது ஒரு சில பாடங்களின் வினாத் தாள்கள் இணையதளத்தில் வெளியானது. இது குறித்து விசாரணை நடைபெற்றது. இதனால் 12-ம் வகுப்பு பொருளாதாரம் மற்றும் 10ம் வகுப்புக்கு கணிதம் பாடத்தில் மறு தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு குறித்த தகவல்களை ஒரு வாரத்திற்குள் இணையதளத்தில் அறிவிக்கும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் கூறியுள்ளது.
3. #Navaneethakrishnan
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் கூண்டோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என நவநீதகிருஷ்ணன் எம்.பி. ராஜ்யசபாவில் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கடந்த 16 நாட்களாக அதிமுக எம்.பி.க்கள் போராடி வருகின்றனர். இதன் காரணமாக 16 நாட்களாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் முடக்கப்பட்டன. ராஜ்யசபா உறுப்பினர்கள் சிலர் ஓய்வு பெறுவதால், அவர்களுக்கு விடை கொடுப்பதற்காக மாநிலங்களவை இன்று செயல்பட்டது. அப்போது அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் பேசும் போது, ‘‘தமிழகத்தி மிக முக்கியமான பிரச்னை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது. அதற்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம். சுப்ரிம் கோர்ட்டில் தீர்ப்பு வந்த பின்னரும் அதை நிறைவேற்ற மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை’’ என்று பேசினார்.
4. #standforthoothukudi
ஸ்டெர்லைட் தொழிற்சாலை, தூத்துக்குடி அருகே சிப்காட் வளாகத்தில் அமைந்திருக்கிறது. கடந்த 1996-ம் ஆண்டு பல்லாயிரம் கோடி முதலீட்டில் தூத்துக்குடியில் உருவான தொழிற்சாலை இது. ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் பிரதான பணி, தாமிரம் (காப்பர்) உற்பத்தி செய்வதுதான். ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகை தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை மாசு படுத்துவதாகவும், இதனால் மக்களுக்கு நோய்கள் உருவாகி வருவதாகவும் ஆரம்பம் முதல் புகார் கூறப்பட்டு வருகிறது. 1996 முதல் 2000-ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் இன்று வரை இந்த விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாக எவ்வித மாற்றமும் நிகழவில்லை. எனவே ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஏறாளமான மக்கள் தூத்துக்குடியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இப்போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
5. #viratkohli
பிரபல இந்திய கிரிகெட் வீரர் விராட் கோலி. இவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்தியாவில் உள்ளனர். இவரின் சாதனைகளை போற்றும் வகையில் இவருக்கு மெழுகு சிலை அமைக்க மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் முடிவெடுத்துள்ளது. தில்லியில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் அனைத்துத் துறைகளை சார்ந்த சாதனையாளர்களின் மெழுகு சிலைகள் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது விராட் கோலியின் சிலையும் இடம்பெற உள்ளது என்ற செய்தி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவரும் இவரின் காதலி நடிகை அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது கோலிக்கு இந்தச் சிலை அமைக்கப்பட உள்ளது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது என்று மனைவி அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.