பயணங்களின்போது பல பாதுகாப்பு அம்சங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இருசக்கர வாகனம் என்றால் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். கார், பேருந்துகளில் பயணித்தார் சீட் பெல்ட்-ஐ அணிவது அவசியம். செல்ஃபோன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டி, சாலை குழிகளில் விழுந்தவர்களெல்லாம் உண்டு. விபத்து யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நேரலாம். அதனால், நம்மால் முடிந்த அளவுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொண்டு பயணத்துக்கு தயாராவதே சிறந்தது.
Advertisment
அப்படி, பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் பயணிகள் சீட் பெல்ட்-ஐ அணிவது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையிலான சம்பவம் ஒன்று சீனாவில் நடைபெற்றது. சீனாவில், ஹூனான் மாகாணத்தில் அமைந்துள்ள சுசோ நகரத்தில் பேருந்து ஒன்று திடீரென கார் மீது மோதியது. அப்போது, ஓட்டுநர் உட்பட சீட் பெல்ட் அணிந்திருந்த பயணிகள் தங்களது இருக்கையிலேயே அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால், சீட் பெல்ட் அணியாத பயணிகள் தங்கள் இருக்கையிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். இந்த விபத்தில், ஒருவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்டார். பெரும்பாலான பயணிகள் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம், விபத்து சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அனைத்து பேருந்துகளிலும் சீட் பெல்ட் இருக்காது என்றாலும், சீட் பெல்ட் வசதிகொண்ட பேருந்துகளிலும், காரில் பயணிக்கும்போதும் அதனை அணிந்துகொள்ளுதல் அவசியம்.