viral fb post: கேரளாவில் 23 வயது இளைஞர் ஒருவர் தனது தாய்க்கு மாப்பிள்ளை தேடி 2 ஆவது திருமணம் செய்து வைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அதற்கான காரணத்தை அந்த இளைஞர் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருப்பது மனங்களை வென்றதுடன் என்னற்றோரின் வாழ்த்து மழையினால் நனைந்து வருகிறது.
சிங்கிள் மதர்..இந்த வார்த்தை பின்னால் இருக்கும் வலி, பொருள், இன்னல்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. தனி ஒரு பெண்ணாக நின்று தனது பிள்ளைகளுக்காக இறுதி வரை வாழும் தாயின் அன்புக்கு இணை வேறு எதுவுமில்லை. இன்றைய நவீன உலகில் எத்தனையோ சிங்கிள் மதர்கள் வேலைக்கு சென்றுக் கொண்டே தங்களது பிள்ளைகளை வளர்த்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட தாயுக்கு ஒரு மகன் செய்த நன்றிக் கடன் இந்த 2 ஆவது திருமணம். தனக்காகவும், தனது எதிர்காலத்திற்காகவும் கணவரை பிரிந்து இத்தனை ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த தனது தாய்க்கு அவரின் மகனே மாப்பிள்ளை தேடி 2 ஆவது திருமணம் செய்து வைத்துள்ளார்.
கேரள மாநிலம், கோட்டயம் நகரைச் சேர்ந்தவர் கோகுல் ஸ்ரீதர். 23 வயதாகும் இந்த இளைஞர் சமீபத்தில் தனது தாயுக்கு 2 ஆவது திருமணத்தை செய்து வைத்துள்ளார். இதற்கான காரணத்தையும்,
அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, “ “சந்தேகம், அவநம்பிக்கை, வெறுப்புணர்வுடன் யாரும் இந்த பதிவை அணுக வேண்டாம், இது எந்த வகையிலும் எங்களை இழிவுபடுத்தாது.
இந்த பெண்மணி (அவரது தாயார்) அவரது வாழ்வை எனக்காக வாழ்ந்தவர், அவரது வாழ்க்கையில் பெரும் துயரங்களை அனுபவித்தார். அதன் ஒரு கட்டத்தில் ஒரு முறை அவரது தலையில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது, அப்போது அவரை பார்த்து, ஏன் இன்னமும் இந்த உறவை தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டேன். தற்போதும் அவரது பதில் எனது நினைவில் உள்ளது, நான் உனக்காக வாழ்கிறேன், அதற்காக இந்த கஷ்டங்களை பொறுத்துக்கொள்வேன் என்றார்.
அந்த நாள் அவரது கையை பிடித்துக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறிய போது இப்படி ஒரு தருணம் வர வேண்டும் என எண்ணினேன்.
எனது தாயாருக்கு திருமண வாழ்த்துக்கள். இதனை நான் யாரிடமும் இருந்தும் மறைக்க விரும்பவில்லை. தனது இளமைகாலத்தை எனக்காக தியாகம் செய்தவர் எனது அம்மா, அவர் மென்மேலும் உயரங்களுக்கு சென்று அவரது கனவை நனவாக்கட்டும்” என கூறியிருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த பதிவுடன் அவர் தனது தாய் மற்றும் தாயின் 2 ஆவது கணவர் புகைப்படத்தையும் சேர்த்து பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவை பார்த்த அனைவரும் கோகுல் ஸ்ரீதரை மனதார பாராட்டியுள்ளனர். அதுமட்டுமில்லை தொடர்ந்து அவரின் செயலுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கோகுல் ஸ்ரீதர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே அவரின் தாய் தனது முதல் கணவரை விட்டு பிரிந்து கோகுலுக்காக வாழ தொடங்கியுள்ளார். அன்றிலிருந்து கோகுலுக்காக வாழ்ந்த அவர் கிடைத்த வேலையெல்லாம் செய்து மகனை படிக்க வைத்துள்ளார். கோகுல் தற்போது இன்ஜீனியர் பட்டதாரி. தனக்காக அம்மா வாழ்ந்த போதும் என்றும் அவரின் சிறகுகள் இறக்கை விரித்து இனியாவது பறக்க தொடங்கட்டும் என்று தனது அம்மாவுடன் படித்த தங்களது குடும்பத்தை பற்றி அனைத்தும் தெரிந்த நபரை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்துள்ளார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.