Viral video of Tiger chews on car bumper and drags it : புலி பசித்தாலும் புல்லை திண்ணாது என்று சொல்வார்கள். உண்மையா பொய்யா என்று அறிந்திருக்க நாம் என்ன அதன் பக்கத்திலா தினமும் இருக்கிறோம். புல் சாப்பிடும் பஞ்சாயத்தே இன்னும் முடியாத நிலையில் புலி ஒன்று ஷைலோ காரின் பம்பரை இழுத்து கடித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஊட்டியில் இருந்து மைசூர் போகும் வழியில் தெப்பாக்காடு பகுதி என்பது தெளிவாக தெரிகிறது. இந்த வண்டி ஷைலோ. அதனால் காரை புலி மென்னுகிறது என்பதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. மகிந்திரா கார் என்றால் ”டெலிசியஸ்” என்ற என்னுடைய எண்ணத்தையே புலியும் பிரதிபலிக்கிறது என்று கேப்சனில் குறிப்பிட்டு இந்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ளார்.
இதற்கு பல்வேறு கருத்துகள் பதிவான நிலையில் ஒருவர் இந்த புலி சம்பவம் பெங்களூருவில் உள்ள பன்னெர்காட்டா தேசிய பூங்காவில் நடைபெற்றது என்றும் அப்போது நானும் அந்த காருக்குள்ளே அமர்ந்திருந்தேன் என்றும் 2020ம் ஆண்டில் இந்த நிகழ்வு அரங்கேறியது என்றும் கூறியுள்ளார். கார் பம்பரை மென்று தின்கிறது என்றார் ஆனந்த். ஆனால் யாஷ் ஷா என்ற நபர், ப்ரேக் டவுனாகி நடுரோட்டில் நின்று கொண்டிருந்த காரை வாயால் கடித்து பின்னோக்கி இழுத்தது இந்த புலி என்று குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட நான்கரை லட்சம் நபர்கள் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். 25 ஆயிரம் பேர் இதனை லைக் செய்துள்ளனர். பல நேரங்களில் சவாரி வாகனங்கள் புலிகளுக்கு அதிக இடையூறு அளிக்கும் விதமாக இருப்பதால் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன என்று கவலை தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil