ஓடும் ரயிலில் மது பாட்டில்களைக் கடத்தி விற்பனை செய்த பெண்ணிடமும் அவருடன் மது பாட்டில் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமியிடமும் பெண் போலீஸ் மது பாட்டில்களை பறிமுதல் செய்கிற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் எப்போதும் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பது ஒரு தேர்தல் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. மதுவிலக்குக்காக தேர்தலுக்கு முன்பு அழுத்தம் கொடுக்கிற கட்சிகள்கூட தேர்தலுக்கு பின்பு அதனை ஒரு சடங்காக பேசி வருவதாகவே உள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் பல இடங்களில் கள்ளச் சந்தையில் மது பாட்டில் விற்பனை செய்யப்பட்டது. புகார் வந்த இடங்களில் காவல்துறையும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஊரடங்குக்கு பிறகு, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மது பானக் கடைகளை நேற்று திறந்தது. முதல் நாளிலேயே கூட்டம் குவிந்துவிட்டது.
இந்த நிலையில்தான், ஓடும் ரயிலில் ஒரு பெண் போலீஸ், ஒரு சிறுமியிடமும் அவருடன் இருந்த பெண்ணிடமும் மது பாட்டில் பறிமுதல் செய்கிற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் பெண் போலீஸ் ஒருவர், ஓடும் ரயிலில் ஒரு சிறுமியிடம் பரிசோதனை செய்து பையில் இருந்து 2 மது பாட்டில்களை பறிமுதல் செய்கிறார். அதோடு, அருகே அமர்ந்து இருக்கும் பெண்ணிடம் மறைத்து வைத்திருக்கும் மது பாட்டில்களையும் எடுத்து தரச்சொல்லி மிரட்டுகிறார். அவரிடம் 2 வயது குழந்தையை வைத்திருக்கிறேன் என்று பார்க்கிறேன் இல்லையென்றால்… என்று கூறுகிறார். அந்த பெண் போலீஸ் அவர்களிடம் இருந்து மது பாட்டில்களைப் பறிமுதல் செய்கிறார். இப்படி, ஓடும் ரயிலில் ஒரு பெண் மது பாட்டில்களைக் கடத்துவதில் சிறுமியை ஈடுபடுத்திய அவல சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”