ஒவ்வொருவருக்கும் திருமணம் நாள் என்பது வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாகும். ஆனால், இந்த திருமண ஜோடிக்கு, அன்றைய நாளில் மேலும் ஒரு ஸ்பெஷலான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கனடாவில் கிளேடன் குக் என்பவருக்கும், பிரிட்டனி குக் என்பவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது. அப்போது அங்குள்ள விக்டோரியா பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன், அருகிலிருந்த குளத்தில் தவறி விழுந்துவிட்டான்.
இதைப் பார்த்த பிரிட்டனி சுதாரித்து உதவி கேட்பதற்குள், எதைப் பற்றியும் கவலைப்படாத புது மாப்பிள்ளை கிளேடன் கண் இமைக்கும் நேரத்தில் குளத்திற்குள் குதித்து அந்தச் சிறுவனை மீட்டு வெளியே தூக்கினார்.
இந்த சம்பவத்தை டேரன் ஹட் என்ற திருமணம் புகைப்படக்காரர் தனது கேமராவில் அப்படியே படம் படித்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். துரிதமாக செயல்பட்ட மாப்பிள்ளை கிளேடனை பாராட்டியும் உள்ளார்.
இதுகுறித்து லண்டனின் சிடிவி செய்தி சேனலுக்கு டேரன் அளித்த பேட்டியில், "அது மிகவும் பயங்கரமான சம்பவம். திடீரென அந்த சிறுவன் தண்ணீருக்குள் விழுந்துவிட்டான். அவன் நிறைய தண்ணீரையும் குடித்துவிட்டான்.
ஆனால், கிளேடன் உடனடியாக அந்த சிறுவனைக் காப்பாற்றியதால் அவன் உயிர் பிழைத்தான். இப்போது அச்சிறுவன் நலமுடன் இருக்கிறான்.
இச்சம்பவம் குறித்து பேசிய மணப்பெண் பிரிட்டனி, "தன்னலமற்ற குணத்திற்காகத் தான், நான் முதல்முறை கிளேடனைப் பார்த்த போது காதலில் விழுந்தேன்" என்றார். (ஓ! இது லவ் மேரேஜா!!)
கிளேடன் சிறுவனைக் காப்பாற்றிய புகைப்படங்கள், தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.