Chennai News Highlights: தற்போது பரவும் கொரோனா தீவிரமானது இல்லை - மத்திய சுகாதாரத்துறை

இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிட் மாறுபாடு எரிஸ் பற்றிய உண்மைகள்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) கிலோ ரூ.91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
    • May 25, 2025 00:22 IST

      பொதுத்துறை நிறுவனங்கள் காஷ்மீரில் கூட்டங்களை நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு கோரிக்கை

      பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பேசிய காஷ்மீர் முதல்வர் அப்துல்லா, பூஞ்ச், ரஜோரி மற்றும் வடக்கு காஷ்மீரில் 23 உயிர்களைக் கொன்ற பாகிஸ்தானின் சமீபத்திய ஷெல் தாக்குதல்கள் குறித்தும் பிரச்சினையை எழுப்பினார். மேலும், குடியிருப்பாளர்களுக்கு தனிப்பட்ட பதுங்கு குழிகள் கட்டுவது அவசியம் என்றும் அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலாத் துறையை மீண்டும் உயிர்ப்பிக்க இரட்டை அணுகுமுறையை முதலமைச்சர் உமர் அப்துல்லா சனிக்கிழமை முன்மொழிந்தார். பொதுத்துறை நிறுவனங்கள் காஷ்மீரில் கூட்டங்களை நடத்தவும், நாடாளுமன்றக் குழு கூட்டங்களை அங்கு கூட்டவும் மத்திய அரசை வலியுறுத்தினார்.



    • May 25, 2025 00:20 IST

      இந்தியாவில் பரவக்கூடிய கொரோனா கடுமையானவை அல்ல: மத்திய சுகாதாரத்துறை

      இந்தியாவில் பரவக்கூடிய கொரோனா வைரஸ்கள் கடுமையானவை அல்ல. அதே சமயம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதை விழிப்புடன் கவனித்து வருகிறது. பல நிறுவனங்களின் மூலம் நிலைமையை முன்கூட்டியே கண்கானித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    • Advertisment
      Advertisements
    • May 25, 2025 00:15 IST

      ரிசர்வ் வங்கிக்கு விஜய் வலியுறுத்தல்

      நகைக்கடன் வழிமுறைகளை திருத்தி, புதிதாக வெளியிட்டுள்ள 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு ஏழை, எளிய நடுத்தர மக்களை மீளா துயரில் ஆளாக்க நேரிடும் என தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



    • May 24, 2025 21:08 IST

      வளர்ந்த பாரதம் ஆக்குவதே நமது இலக்கு: அதற்காக 2047 வரை காத்திருக்க வேண்டியதில்லை: மோடி

      நிதி ஆயோக் நிர்வாகக் குழுவில் உரையாற்றிய மோடி, “2047 ஆம் ஆண்டுக்குள் இந்தயாவை வளர்ந்த பாரதம் ஆக்குவது என்ற ஒரே இலக்கில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தையும், ஒவ்வொரு நகரத்தையும், ஒவ்வொரு நகர் பாலிகா விக்சித் மற்றும் ஒவ்வொரு கிராமத்தையும் வளர்ச்சியாக ஆக்குவதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்த வழிகளில் நாம் செயல்பட்டால், விக்சித் பாரதமாக மாற 2047 வரை காத்திருக்க வேண்டியதில்லை” என்றார்.



    • May 24, 2025 21:04 IST

      'விக்சித் பாரத்' நோக்கிய பயணம்: கோவை முதல்வர் உறுதி

      பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட  கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் 'விக்சித் பாரத்' நோக்கிய பயணத்தில் இந்திய அணியின் முக்கிய அங்கமாக, கோவா தனது முழு பங்களிப்பையும் முழுமையாக வழங்க உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.



    • May 24, 2025 20:17 IST

      தமிழகத்தில் கடற்கரைகளின் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி

      சென்னை மெரினா, கடலூர் சில்வர், நானை காமேஸ்வரம், ராமநாதபுரம் அரியமான் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு, நீலக்கொடி சான்றிதழ் வழங்கி, ரூ18 கோடியில் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது,



    • May 24, 2025 20:13 IST

      எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்த முதல் பார்வையற்ற இந்திய பெண் சாதனை

      இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சோன்சின் அங்மோ என்ற பார்வையற்ற பெண்மணி, எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்த முதல் பார்வையற்ற இந்திய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் உலகளவில் இந்த சாதனையை படைத்த 5-வது பெண் இவர் பார்வை இல்லாதது எனது பலவீனம் அல்ல, அதுதான் எனது பலம் என்று கூறியுள்ளார். 



    • May 24, 2025 19:16 IST

      கடலில் மூழ்கிய கப்பல்

      திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட சரக்கு கப்பல் கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் மொத்தம் 25 பேர் இருந்த நிலையில், லைஃப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து தப்பினர். இந்நிலையில், கப்பலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெறுகிறது. இது தவிர கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் 376 மெட்ரிக் டன் கந்தக எரிபொருள் இருந்ததால், அவை கரை ஒதுங்கும் போது மக்கள் யாரும் அருகே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    • May 24, 2025 18:33 IST

      இ.பி.எஸ்-க்கு ஸ்டாலின் பதிலடி

      தன் மீது அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதன்படி, "என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை, எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது போல் காவிக் கொடியும் இல்லை" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



    • May 24, 2025 17:43 IST

      4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ்

      சென்னை மெரினா கடற்கரை, கடலூர் வெள்ளி கடற்கரை, நாகை காமேஸ்வரம் கடற்கரை, ராமநாதபுரம் அரியமான் கடற்கரைகளில் நீலக்கொடி சான்றிதழுக்கான பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ. 18 கோடி மதிப்பில் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.



    • May 24, 2025 17:27 IST

      சாதிவாரி கணக்கெடுப்பு - அன்புமணி கேள்வி

      "ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்? வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க, தி.மு.க-வுக்கு மனசு இல்லை. இப்போது நினைத்தாலும் 2 மாத‌த்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கலாம்" என்று அன்புமணி தெரிவித்துள்ளார். 



    • May 24, 2025 17:23 IST

      ஒவ்வொரு மாநிலமும் வளர்ந்த மாநிலமாக உருவானால், நாடு வளர்ந்த நாடாக வலிமை பெறும் - மோடி பேச்சு

      மாநிலங்கள் வளர்ந்தால் நாடு வளர்ச்சி அடையும்; ஒவ்வொரு மாநிலமும் வளர்ந்த மாநிலமாக உருவானால், நாடு வளர்ந்த நாடாக வலிமை பெறும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், “ஒவ்வொரு மாநிலத்திலும் சர்வதேச தரத்தில் ஒரு சுற்றுலா மையம் அமைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்; மத்திய அரசுடன் மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; மத்திய, மாநில அரசுகள் ஓரணியாக செயல்பட்டால் எந்த குறிக்கோளையும் எட்டலாம்,”இவ்வாறு தெரிவித்தார்.



    • May 24, 2025 17:18 IST

      கேரளா முதல்வருக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து 

      நீண்டகாலம் உடல் நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

      இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில், "கேரள முதல்வரும் எனது அன்பு தோழருமான பினராயி விஜயனுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முற்போக்கான அரசு நிர்வாகத்தின் மீதான தங்களது அர்ப்பணிப்பும், கூட்டாட்சியியல் மற்றும் மதச்சார்பின்மை மீதான நமது உறுதிப்பாடும் தமிழ்நாடு – கேரள உறவினை வலுப்படுத்துகின்றன. நமது இரு மாநிலங்களும் இணைந்து நின்று நமது பண்பாட்டு உறவுகளையும் பொதுவான இலக்குகளையும் போற்றுவோம்! தாங்கள் நீண்டகாலம் உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார். 



    • May 24, 2025 17:17 IST

      ஒரு மாதமாக இரவில் தூக்கமில்லை - அன்புமணி 

      "என் மனதிற்குள் பல கேள்வி. நான் என்ன தவறு செய்தேன். ஏன் மாற்றப்பட்டேன். பாமக நிறுவனர் என்ன நினைத்தாரோ அதைத்தான் நிறைவேற்றினேன்" என்று பா.ம.க செயல் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 



    • May 24, 2025 17:15 IST

      பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தது பெரும் சோகம்  - ராகுல் காந்தி

      ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தது பெரும் சோகம். ஜம்மு-காஷ்மீரில் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை தேசிய அளவில் எடுத்துச் செல்வேன்.பூஞ்சில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை புரிந்துகொள்ள முயற்சித்தேன்." என்று அவர் தெரிவித்தார்.



    • May 24, 2025 17:03 IST

      நிதி ஆயோக் கூட்டம் - ஸ்டாலின் வலியுறுத்தல் 

      டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'மத்திய அரசின் வரி வருவாயில் 50% வருவாயை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாததால் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி மறுக்கப்படுகிறது. 2024 - 2025 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ரூ. 2,200 கோடி நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி, ஒருதலைப்பட்சமான நிபந்தனைகளை வலியுறுத்தாமல் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும். 

      காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கிய ஆறுகளை சுத்தம் செய்து மீட்டெடுப்பது அவசியம், காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும். இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' என்று அவர் கூறியுள்ளார். 



    • May 24, 2025 16:54 IST

      தீவிரவாதத்தை பார்த்து அமைதியாக இருக்க மாட்டோம் - அமெரிக்காவில் சசி தரூர் பேச்சு 

      தீவிரவாதத்தை பார்த்து அமைதியாக இருக்க மாட்டோம் என்று அமெரிக்காவில் சசி தரூர் ஆவேசமாக கூறினார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடந்த ஆபரேஷன் சிந்தூருக்கு உடனடி ஆதரவு அளித்திருந்த காங்கிரஸ் கட்சி, ஒன்றிய அரசின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுக்களை திசைதிருப்பும் முயற்சி என்று விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் தலைமையிலான குழு கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா சென்றது.

      அவர்கள் தீவிரவாதிகளால் மிகக் கொடூரமான முறையில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதையும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், கடந்த காலங்களில் தீவிரவாதத்தால் இந்தியாவிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் உலக நாடுகளுக்கு எடுத்துரைப்பதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்தியாவின் அமைதி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கான மதிப்புகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் குழு வலியுறுத்தும்.

      அமெரிக்கா சென்றுள்ள சசி தரூர் தலைமையிலான குழுவினர், அந்நாட்டு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து சசி தரூர் அளித்த பேட்டியில், ‘தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலகிற்கு எடுத்துரைக்க, ஐந்து நாடுகளுக்கு செல்கிறோம். எங்களது குழுவில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்ளனர். தீவிரவாதத்தை பார்த்து நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்’ என்று உறுதியாகக் கூறினார்.



    • May 24, 2025 16:52 IST

      ஆபரேஷன் சிந்தூர் - மாஸ்கோவில் கனிமொழி விளக்கம்

      "பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதைத்  தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. பொதுமக்களோ, பாக். ராணுவமோ எங்கள் இலக்கு அல்ல. பயங்கரவாதிகள் மட்டுமே எங்கள் இலக்கு" என்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தி.மு.க எம்.பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். 



    • May 24, 2025 16:42 IST

      அ.தி.மு.க-வினரைப் போல் கைகட்டி சந்திக்க முதல்வர் செல்லவில்லை - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு 

      தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “அதிமுகவினரைப் போல் கைகட்டி சந்திக்க முதல்வர் செல்லவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்வர் சென்றதை அதிமுகவினர் கொச்சைப்படுத்துகின்றனர்,” என்று தெரிவித்தார்.



    • May 24, 2025 15:49 IST

      "வரியில் 50% தமிழகத்திற்கு தர வேண்டும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

      வரிப்பகிர்வில் மாநிலத்திற்கு 50 விழுக்காடு வழங்க நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு வரி வருவாய் பங்கு 41%ஆக உயர்த்தப்பட்டது; ஆனால் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்



    • May 24, 2025 15:35 IST

      தமிழகத்திலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை

      கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது வரும் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். 



    • May 24, 2025 15:18 IST

      வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் - பிரதமர் மோடி

      நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்; மத்திய அரசுடன் மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; மத்திய, மாநில அரசுகள் ஓரணியாக செயல்பட்டால் எந்த குறிக்கோளையும் எட்டலாம் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 



    • May 24, 2025 15:17 IST

      மாநிலங்கள் வளர்ந்தால் நாடு வளரும் - பிரதமர் மோடி

      மாநிலங்கள் வளர்ந்தால் நாடு வளர்ச்சி அடையும்; ஒவ்வொரு மாநிலமும் வளர்ந்த மாநிலமாக உருவானால், நாடு வளர்ந்த நாடாக வலிமை பெறும் ஒவ்வொரு மாநிலத்திலும் சர்வதேச தரத்தில் ஒரு சுற்றுலா மையம் அமைக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 



    • May 24, 2025 15:01 IST

      முதலமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர்

      பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற மாநில முதலமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்



    • May 24, 2025 14:59 IST

      ரீல்ஸ் மோதல் - மாணவனுக்கு அரிவாள் வெட்டு

      சென்னையில் இன்ஸ்டா ரீல்ஸ் பதிவிடுவதில் போட்டி 15 வயது சிறுவனுக்கு அரிவாள் வெட்டு. இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் சிறுவனை சரமாரியாக வெட்டியது. சிறுவனை வெட்டியதாக, 3 சிறார்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறை. தலைமறைவாக இருந்து வரும் மற்ற நபர்களையும், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்



    • May 24, 2025 14:57 IST

      டெஸ்ட் தொடர்: முகமது ஷமி இடம்பெறவில்லை

      இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணிய்ல் முகமது ஷமி இடம்பெறவில்லை. முழு உடல் தகுதியுடன் முகமது ஷமி இல்லாததால் தேர்வு செய்யவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். 



    • May 24, 2025 14:35 IST

      நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

      மத்திய, மாநில அரசுகள் ‘டீம் இந்தியாவைப் போல இணைந்து செயல்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல. ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சியடைந்து இருக்கும்போது, பாரதமும் வளர்ச்சி அடைந்ததாக இருக்கும். இதுவே, 140 கோடி மக்களின் விருப்பம். நாம் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் உலகத் தரத்திற்கு இணையாக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறைந்தது ஒரு சுற்றுலா தலத்தையாவது உருவாக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 



    • May 24, 2025 14:06 IST

      இந்திய டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில்

      இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வு; பண்ட் துணைக் கேப்டன் இங்கிலாந்து - இந்தியா அணிகள் பங்கேற்கும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூன் 20ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ



    • May 24, 2025 13:51 IST

      டெல்லியில் இன்று மாலை மோடியை சந்திக்கிறார் ஸ்டாலின்

      தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 24, 2025) மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு மாலை 4.30 மணியளவில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

      பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை தனியாக சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பில் தமிழகத்தின் நிலுவையிலுள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், மாநில நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



    • May 24, 2025 13:36 IST

      ஸ்டாலின் இப்போது ஏன் டெல்லி சென்றுள்ளார்? - ஜெயக்குமார் கேள்வி

      அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (மே 24, 2025) செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "அமலாக்கத்துறை வலையில் முதல்வர் ஸ்டாலின் சிக்கியுள்ளார். அமலாக்கத்துறையிடம் இருந்து தப்பிக்கவே டெல்லி சென்று ஸ்டாலின் தவமிருக்கிறார்" என்று குற்றம்சாட்டினார். மேலும், அவர் "கடந்த 4 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத ஸ்டாலின் இப்போது ஏன் டெல்லி சென்றார்?" என்றும் கேள்வி எழுப்பினார்.



    • May 24, 2025 13:11 IST

      தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை - வானிலை ஆய்வு மையம் 

      கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமான தேதிக்கு முன்னதாகவே தொடங்கிய நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும், கர்நாடகாவின் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

      இன்று (மே 24, 2025) இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், கர்நாடகாவின் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. முன்னதாக, கேரளாவில் மே 24 ஆம் தேதிக்கு 8 நாட்களுக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.



    • May 24, 2025 12:34 IST

      கேரளாவில் 8 நாட்களுக்கு முன்பே தொடங்கியது தென்மேற்கு பருவமழை - வானிலை ஆய்வு மையம்

      இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமான தேதியான ஜூன் 1 ஆம் தேதிக்கு 8 நாட்களுக்கு முன்னதாகவே, மே 24 ஆம் தேதியே தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

      இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன்மூலம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் முதல் வாரத்தில் பருவமழை பரவக்கூடும். இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 80% தென்மேற்கு பருவமழை காலத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



    • May 24, 2025 11:34 IST

      தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடா? சுகாதாரத்துறை மறுப்பு

      தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக இந்த நாள் வரை எந்தவொரு புதிய கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை

      சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு சுகாதாரத்துறை மறுப்பு



    • May 24, 2025 11:34 IST

      நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத முதல்வர்கள்

      மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். உடல்நிலையை காரணம் காட்டி கர்நாடக முதல்வர் சித்த ராமையா, பிகார்  முதல்வர் சித்த ராமையா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை



    • May 24, 2025 11:08 IST

      நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

      டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் இதில் பங்கேற்றுள்ளார். கல்வி, நிதி பங்கீடு தொடர்பாக கூட்டத்தில் எடுத்துரைக்க திட்டம்



    • May 24, 2025 10:34 IST

      நிதி ஆயோக் கூட்டம் - மம்தா, சித்தராமையா பங்கேற்கவில்லை

      டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். உடல்நிலையை காரணம் காட்டி கர்நாடக முதல்வர் சித்த ராமையாவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை



    • May 24, 2025 10:30 IST

      ஜம்மு விமான நிலையத்தை அடைந்த ராகுல் காந்தி

      ராகுல் காந்தி ஜம்மு விமான நிலையத்தை அடைந்தார்.

      பாகிஸ்தானின் எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க அவர் பூஞ்ச் ​​செல்கிறார்.



    • May 24, 2025 09:54 IST

      24 மணி நேரத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை

      கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



    • May 24, 2025 08:49 IST

      ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது

      அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு திசை நோக்கி நகர்கிறது. ரத்தினகிரிக்கும் டாபோலிக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரைய கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரத்னகிரி 40 கி.மீ. வடமேற்கில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



    • May 24, 2025 08:21 IST

      சென்னை விமான நிலையத்தில் 5 விமானங்கள் திடீர் ரத்து

      சென்னையில் இருந்து தூத்துக்குடி, புனே நகரங்களுக்கு புறப்பட வேண்டிய மற்றும் வருகை தர வேண்டிய விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு காலை 6, பிற்பகல் 2.30-க்கு செல்லும் ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானங்கள் புனேவிலிருந்து அதிகாலை 4.25 மணிக்கு சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம், தூத்துக்குடியில் இருந்து மதியம் 1.45க்கும், மாலை 6.30க்கும் சென்னைக்கு வரும் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.



    • May 24, 2025 08:17 IST

      பராமரிப்புப் பணி: இன்று 18 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

      சென்னை கவரப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் மே 24, 26 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.15 முதல் பிற்பகல் 3.15 மணி வரை நடைபெறவுள்ளன. இப்பணிகள் நடைபெறும் நேரங்களில் சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள், கடற்கரை - கும்மிடிப்பூண்டி உள்பட மொத்தம் 18 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையான ரத்து செய்யப்படவுள்ளன.



    • May 24, 2025 08:14 IST

      தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்காதது ஏன்? - மத்திய அரசு

      கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறி்த்த விவரங்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை. இதனால், 25% ஏழை மாணவர்கள் இடஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டண தொகை ஒதுக்கப்படவில்லை. நாடு முழுவதும் பல மாநிலங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை" என்று தெரிவித்தார்.



    • May 24, 2025 07:41 IST

      அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

      தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, கரூர், விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    • May 24, 2025 07:20 IST

      TNPSC குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

      கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3,935 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. தேர்வர்கள் 25.04.2025 முதல் 24.05.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கபட்டு இருந்தது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் இணையதளம் வழியாக பதிவு செய்து பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (24-ந் தேதி) கடைசி நாளாகும்.



    • May 24, 2025 07:18 IST

      பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்

      நடப்பு நிதி ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றே டெல்லி சென்றுவிட்டார்.  கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



    • May 24, 2025 07:12 IST

      தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்- வானிலை மையம்

      திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் நாளை, நாளை மறுநாள் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோடை மழை சில பகுதிகளில் அதீதமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பாதுகாப்புப்படையினரில் கோவை, நீலகிரிக்கு தலா ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மாநில பேரிடர் மேலாண்மை குழு வீரர்களில் தலா ஒரு குழு கோவை மற்றும் திண்டுக்கல்லுக்கும், நீலகிரிக்கு 2 குழுக்களும், என 160 வீரர்கள் ராணிப்பேட்டையில் இருந்து சென்றனர்.



    Tamilnadu Live News Udpate Chennai

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: