அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவடைந்துள்ளது.
வார வர்த்தகத்தின் முதல்நாளான நேற்று ( 19ம் தேதி) வர்த்தகநேர துவக்கத்தில் ரூ.71.48 ஆக இருந்த இந்திய ரூபாய், வர்த்தகநேர முடிவில் 71.43 ஆக இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 29 பைசாக்கள் அளவில் சரிவடைந்துள்ளது. இது ஆறுமாத காலத்திற்குள் இல்லாத சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர் அதிகரிப்பும், வெளிநாட்டு கரன்சிகளுடனான மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டின் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், வளர்ச்சியில் தடை உள்ளிட்ட காரணங்களினாலேயே, இந்திய ரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிராக தொடர்ந்து சரிவடைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தில் சுணக்க நிலை நிலவிவருவதால், அரசு இதில் தலையிட வேண்டும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதாக போரெக்ஸ் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு, வர்த்தகநேர முடிவில் ரூ.71.45 ஆக இருந்தது.
சர்வதேச சந்தையில் பிரென்ட் எண்ணெயின் விலை கணிசமாக அதிகரித்தது, ஆசிய சந்தைகளில் இந்திய ரூபாயின் மதிப்பை சரிவடைய செய்ததாக ஹெச்டிஎப்சி செக்யூரிட்டீஸ் நிறுவன உயரதிகாரி வி கே சர்மா கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில், அமெரிக்க டாலரின் மதிப்பு சமீபகாலமாக அதிகரித்து வருவதால், இந்திய கரன்சியின் மதிப்பு தொடர் சரிவு கண்டுவருவதாக சர்மா மேலும் கூறியுள்ளார்.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி மற்றும் ஐரோப்பிய சென்ட்ரல் பேங்க் உள்ளிட்டவைகள் அளிக்கும் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருப்பதாக வாலிடஸ் வெல்த் நிறுவன உயரதிகாரி ராஜேஷ் செருவு தெரிவித்துள்ளார்.
பொருளாதார மந்தநிலை காரணமாக உற்பத்தி மற்றும் வளர்ச்சியின் விகிதம் சீரான வேகத்தில் இல்லாததால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளன.