/indian-express-tamil/media/media_files/2025/10/10/international-gold-price-2025-10-10-10-43-12.jpg)
Gold prices may see a sharp correction
உலகளாவிய நிதி நெருக்கடிகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று ஒரு அவுன்ஸ் $4,000 என்ற புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நடப்பு நிதியாண்டில் மட்டும் சர்வதேச தங்கத்தின் விலை 30% வரை உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் எழுச்சி இதைவிடத் தீவிரமாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் மஞ்சள் உலோகத்தின் விலை 37.5% வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக, அக்டோபர் மாதத்தின் முதல் 8 நாள்களில் மட்டும் 6% உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த அதிவேக ஏற்றம் காரணமாக விரைவில் முதலீட்டாளர்கள் மத்தியில் லாபப் பதிவுகள் (Profit-Booking) வரக்கூடும் என நிதி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சரிவுக்குக் காத்திருக்கும் சந்தை அறிகுறிகள்
அமெரிக்க அரசாங்க முடக்கம், இஸ்ரேல்-ஹமாஸ் அமைதி ஒப்பந்தத்திற்கான சாத்தியக்கூறுகள் போன்ற உலகளாவிய நிகழ்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. இதற்கிடையில், டாலர் குறியீடு (Dollar Index) இரண்டு மாத உயர்வை எட்டி, 99 என்ற நிலையை நெருங்கி வருகிறது. இது தங்கம் மற்றும் வெள்ளியில் லாபப் பதிவுக்கு ஒரு சாத்தியமான தூண்டுதலாக இருக்கும் எனப் பார்க்கப்படுகிறது.
எச்.டி.எஃப்.சி. செக்யூரிட்டீஸின் அனுஜ் குப்தா, "டாலர் குறியீடு இந்த வாரம் 1.27% உயர்ந்து 98.7-ல் வர்த்தகமாகிறது. இதுவே தங்கம் மற்றும் வெள்ளியில் லாபப் பதிவுக்கு முதல் சமிக்ஞையாகும்" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த அல்கோ ஆய்வாளரும் (Algo analyst) ஆரோரா அறிக்கையின் (Arora report) ஆசிரியருமான நிகம் அரோரா இதனை ஒப்புக்கொண்டு, " தங்கம் தற்போது அதிகமாக வாங்கப்பட்ட (Overbought) நிலையில் இருப்பதால், விலைச் சரிவுக்கு (Pullback) அதிக வாய்ப்புள்ளதாக” கூறுகிறார்.
”வலுப்பெற்று வரும் டாலர், அமெரிக்க அரசாங்க முடக்கம் முடிவுக்கு வருதல் மற்றும் அக்டோபரில் வட்டி விகிதங்களைக் குறைக்க ஃபெடரல் ரிசர்வ் எடுத்த முடிவு ஆகியவை இந்தச் சரிவுக்குத் தூண்டுதலாக அமையலாம்.
மற்ற காரணங்களில், பிரான்ஸ் மற்றும் ஜப்பானில் பத்திரங்களின் வருவாய் (bond yields) அதிகரித்து வருகிறது. பிரான்சில் ஒரு புதிய அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றினால், அல்லது ஜப்பானில் அடுத்த பிரதமர் நிதிக் கொள்கையை கட்டுப்பாடில்லாமல் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்றும், ஜப்பான் வங்கி மீது வட்டி விகிதங்களில் அழுத்தம் கொடுக்க மாட்டேன் என்றும் தெளிவுபடுத்தினால், தங்கம் விலையில் ஒரு திருத்தம் (correction) ஏற்படலாம்.
தங்கம் மட்டுமின்றி, வெள்ளியின் விலையும் அபாரமாக உயர்ந்து வருகிறது. ஒருவேளை விலை குறையத் தொடங்கினால், வெள்ளியின் விலை தங்கத்தின் சரிவை விட 1.7 மடங்கு வேகமாகக் குறையும் அபாயம் இருப்பதாக” அரோரா கணித்துள்ளார்.
குவான்டம் ஏஎம்சி-ன் சிஐஓ சிராக் மேத்தா கூறுகையில், "தங்கத்திற்கான அடிப்படை காரணிகள் இன்னும் சாதகமாக இருந்தாலும், குறுகிய காலத்தில் சுமார் 30% உயர்ந்துள்ளதால், இந்த ஏற்றத்தைச் சந்தை சரிசெய்து கொள்ளும் வகையில் ஒரு திருத்தம் அவசியம். 1970கள் அல்லது 2000களில் நடந்த முந்தைய ஏற்றச் சந்தைகளில் நாம் கண்டது போல, அதிகமாக வாங்கப்பட்ட சந்தையில் 10-15% திருத்தம் ஆரோக்கியமானதாக இருக்கும்" என்றார். இருப்பினும், தங்கத்தில் முதலீட்டாளர்களிடையே அடிப்படை ஏற்றம் (underlying bullishness) இருப்பதாக அவர் நம்புகிறார்.
எனினும், லண்டனை தளமாகக் கொண்ட புல்லியன் ஆராய்ச்சி நிறுவனமான மெட்டல் ஃபோகஸின் முதன்மை ஆலோசகர் சிராக் ஷேத், "எங்கள் கணிப்பின்படி, ஒட்டுமொத்த ஏற்றத்தின் உத்வேகம் (Momentum) தொடரும்" என்று கூறி, நீண்டகால முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
ஆகவே, குறுகிய காலத்தில் விலை குறைய வாய்ப்பு இருந்தாலும், தங்கத்தில் முதலீடு செய்வதற்கான அடிப்படை காரணிகள் இன்னும் வலுவாகவே உள்ளன என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.