ஆர்.சந்திரன்
பிப்ரவரி மாதத்தின் F&O எனப்படும், ஊக வணிகம் 4வது வியாழக்கிழமையான இன்று நிறைவு பெற்றாலும், அது சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால், இன்று மும்பை சந்தையின் சென்செக்ஸ் 25 புள்ளிகளை மட்டும் இழந்து 33,819 என்ற நிலையிலும், தேசிய பங்குசந்தை 15 புள்ளிகள் சரிவுடன் 10,383 என்ற அளவிலும் தமது வணிகத்தை நிறைவு செய்தன.
வணிகம் தொடங்கியதிலிருந்தே சரிவில் தொடர்ந்து வந்த சந்தை, மாலை 2 மணிவாக்கில் சற்று நிமிர்ந்தது. ஆனாலும் நேற்றைய வணிக நிறைவின் போதிருந்த நிலையைத் தாண்டி முன்னேற முடியவில்லை. பொதுவில் சுறுசுறுப்பு இல்லாத நிலையே தொடர்ந்தது.
இந்திய சந்தையில் மட்டுமின்றி, பிற ஆசிய சந்தைகளிலும் குறிப்பிட்டு சொல்லும்படி நம்பிக்கை கிற்று தெரியவில்லை. கடன் வட்டி திசைக்காட்டிகள் வடக்கைக் காட்ட, மற்ற நாட்டு நாணயங்களுடன் ஒப்பிடும்போது டாலர் மதிப்பின் போக்கும் ஒரு வாரத்தில் இல்லாத உயர்வைக் காட்டின.