/indian-express-tamil/media/media_files/QPQ7Rb4Awp29PEJqYdgV.webp)
Senior Citizens Savings Scheme SCSS maximum investment SCSS tax benefit Post office savings scheme
வாழ்க்கையின் முக்கிய கட்டமான ஓய்வுக் காலத்தில், பல மூத்த குடிமக்களின் வருமானம் குறைவது இயல்பு. இத்தகைய சூழலில், அவர்கள் ஒரு முறை முதலீடு செய்து, நீண்ட காலத்திற்குத் தொடர்ச்சியான வருமானத்தை ஈட்ட உதவும் முதலீட்டுத் திட்டங்கள் பேருதவி புரிகின்றன. அப்படி, மத்திய அரசின் உறுதியான பாதுகாப்பில், மிகச் சிறந்த வட்டி வருமானத்தைத் தரும் திட்டம்தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Savings Scheme - SCSS).
இந்தத் திட்டத்தில் ஒரேயொரு முறை முதலீடு செய்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் நிலையான வருமானம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து சேரும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்
1. யார் கணக்கு தொடங்கலாம்?
சாதாரண நபர்கள்: 60 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு தனிநபரும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.
ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்கள்: 55 வயதுக்கு மேற்பட்ட, ஆனால் 60 வயதுக்குக் குறைவான ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியப் பலன்கள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் முதலீடு செய்ய வேண்டும்.
ஓய்வு பெற்ற ராணுவ ஊழியர்கள்: 50 வயதுக்கு மேற்பட்ட, ஆனால் 60 வயதுக்குக் குறைவான ஓய்வு பெற்ற ராணுவ ஊழியர்களும், ஓய்வூதியப் பலன்கள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் முதலீடு செய்யலாம்.
2. அதிகபட்ச வட்டி விகிதம்!
இந்தத் திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் 8.2% ஆகும். இது சுகன்யா சம்ரித்தி திட்டத்திற்கு இணையாக அதிக வட்டி வழங்கும் மிகச் சில திட்டங்களில் ஒன்றாகும்.
வட்டி செலுத்தும் முறை: முதலீடு செய்த தேதியிலிருந்து ஒவ்வொரு காலாண்டிலும் (ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில்) வட்டி செலுத்தப்படும்.
3. முதலீட்டு வரம்பு
குறைந்தபட்சம்: ₹1,000 முதல் முதலீடு செய்யலாம்.
அதிகபட்சம்: ஒரு மூத்த குடிமகன் இந்தக் கணக்கில் அதிகபட்சமாக ₹30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
4. காலாண்டுக்கு ₹61,500 பெறுவது எப்படி?
ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வுக் காலத்தை நிதிச் சுமையின்றி கழிக்க, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் அதிகபட்சமான ₹30 லட்சம் தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
ஐந்து ஆண்டுகளில், முதலீடு செய்த ₹30 லட்சத்திற்கு கூடுதலாக, நீங்கள் மொத்தமாக ₹12.30 லட்சம் வட்டி வருமானமாகப் பெறுவீர்கள். காலம் முடிந்த பின் உங்கள் அசல் தொகை (₹30 லட்சம்) திரும்பக் கிடைத்துவிடும்.
வரிச் சலுகைகளும் கணக்கு நீட்டிப்பும்
வரிச் சலுகை:
இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடு, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-ன் கீழ் ₹1.50 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளைப் பெற தகுதியுடையது.
ஒரு நிதியாண்டில் கிடைக்கும் மொத்த வட்டி ₹50,000-க்கு மேல் இருந்தால் மட்டுமே வரி (TDS) பிடித்தம் செய்யப்படும். 15G/15H படிவத்தைச் சமர்ப்பித்தால், வட்டி வரம்பிற்குள் இருக்கும்பட்சத்தில் TDS பிடிக்கப்படாது.
திட்டத்தை நீட்டித்தல்:
5 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, கணக்கைத் தொடர விரும்பினால், சம்பந்தப்பட்ட அஞ்சல் அலுவலகத்தில் படிவத்தைச் சமர்ப்பித்து மேலும் 3 ஆண்டுகளுக்கு இந்தக் கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம். நீட்டிக்கப்பட்ட காலத்திலும் அதே வட்டி விகிதத்தில் வருமானம் கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் தங்கள் அசல் தொகைக்கு எந்த ஆபத்தும் இல்லாமல், ஒவ்வொரு காலாண்டிலும் நிலையான வருமானம் பெற விரும்பினால், இந்த மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.