பெ. தேவராஜ்
இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் தொடர்ந்து உயர்ந்த கொண்டே இருக்கிறது. குறிப்பாக வரலாற்றில் முதன்முறையாக 20000 புள்ளிகளை சமீபத்தில் எட்டியது. தொடர்ந்து குறீயீடுகள் உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள சில புள்ளிவிபரங்கள் சந்தை நீண்ட காலத்துக்கு இதே உயர்வில் செல்லுமா? என்ற கேள்வியை நமக்கு ஏற்படுத்துகிறது.
அதிகம் விற்கும் நிறுவன உரிமையாளர்கள்
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிறுவன உரிமையாளர்கள் நடப்பு ஆண்டான 2023ல் ஆகஸ்ட் மாதம் வரையில் மட்டும் 80,754 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை சந்தையில் விற்றுள்ளார்கள். ஆனால் கடந்த 2022ம் ஆண்டில் 41020 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை மட்டும் நிறுவன உரிமையாளர்கள் விற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே 2021ம் ஆண்டில் 32870 கோடி ரூபாயாகவும் 2020ம் ஆண்டில் 51371 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதே 2019ம் ஆண்டில் 38226 கோடி ரூபாயாகவும் 2018ம் ஆண்டில் 19,258 ரூபாயாகவும் இருந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் அதிகமான நிறுவன உரிமையாளர்கள் தங்களது பங்குகளை விற்றுள்ளார்கள், இது மிகவும் ஆபத்தான போக்கு என்று ஜெரோதா நிறுவனத்தின் நிறுவனர் நிகில் காமத் தெரிவித்துள்ளார்.
பங்குச்சந்தை உயரும் போக்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் நோக்கில் நிறுவன உரிமையாளர்கள் தங்கள் வசம் உள்ள பங்குகளை விற்று வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், நீங்கள் வைத்திருக்கும் ஒரு நிறுவன பங்கினை அந்த நிறுவனத்தின் உரிமையாளரே விற்கும் போக்கும் ஆரோக்கியமானது அல்ல என்றும் கூறுகின்றனர். இதுமட்டுமல்லாமல் இன்ஸடைர் செல்லிங் என்று சொல்லக்கூடிய நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், உறவினர்கள், பங்குதாரர்கள் தங்களது வசம் உள்ள பங்குகளை விற்று வருகின்றனர். உதாரணமாக ஐடிஎப்சி நிறுவனத்தின் தலமைச் செயல் அதிகாரி வைத்தியநாதன் தன் வசம் உள்ள பங்குகளை ஜிகிஜி பார்ட்னர்ஸ் நிறுவனத்துக்கு விற்றது குறிப்பிடத்தக்கது.
QIP நிதி திரட்ட போட்டி போடும் நிறுவனங்கள்
தற்போது சந்தை உயர்வில் பல நிறுவனங்களின் நிறுவன மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் பங்கு விலையும் அதிகரித்துள்ளது. இதனால் அந்த நிறுவனங்கள் முதலீடு திரட்ட போட்டி போட்டு வருகின்றன. QIP என்பது தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டு வாய்ப்பு. இதன்மூலம் நிறுவனங்கள் நிறுவன முதலீட்டாளர்களிடம் பங்குகளை கொடுத்து நிதி திரட்ட முடியும். தற்போது பல்வேறு நிறுவனங்கள் இந்த முறையில் நிதி திரட்டி வருகின்றன. புளுஸ்டார் நிறுவனம் QIP மூலம் 1000 கோடி ரூபாய் நிதி திரட்டியது. டெக்ஸ்ம்கோ ரயில் நிறுவனம் QIP மூலம் 1000 கோடி ரூபாய் நிதி திரட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் நிறுவன மதிப்பில் நிதி திரட்டும் போது அது நிறுவனத்துக்கு சாதகமாக அமையும். ஆனால், தொடர்ந்து நிறுவன மதிப்பு இதே நிலையில் நீடிக்குமா? என்ற கருத்தும் நிலவுகிறது.
பங்குச்சந்தை குறியீடுகள் வரலாற்று உச்சத்தில் வர்த்தகமாகும் போது சிறுமுதலீட்டாளர்கள் இந்த புள்ளிவிவரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பங்குகளை தேர்வு செய்யும் போது தங்களிடம் உள்ள பங்குகளில் இதுபோன்ற நடைமுறைகள் ஏதேனும் நிகழ்கிறதா? என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“