/indian-express-tamil/media/media_files/2025/10/30/retail-g-2025-10-30-18-37-16.jpg)
தீபாவளி பண்டிகை முடிந்தவுடன், “இப்போ வியாபாரம் மந்தமாக இருக்கும்” என்ற மனநிலை பலரிடமும் காணப்படுகிறது. ஆனால் இந்த எண்ணமே தொழிலில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்று வணிக ஆலோசகரும் ரீட்டெயில் ஜி நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.அருண்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ரீட்டெயில் (Retail) துறையைப் பொறுத்தவரை, ஆடை மற்றும் அலங்கார பொருட்கள் போன்ற சில பிரிவுகளில் பண்டிகை காலத்துக்கு முன்பும் அதன் போது அதிக விற்பனை நிகழ்வது இயல்பே. ஆனால் அதைப் போல் உணவுப் பொருட்கள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போன்ற துறைகளில் வியாபாரம் ஆண்டின் அனைத்து நாட்களிலும் சீராகவே நடைபெறும்.
அன்றாட தேவைகள் குறைவதில்லை, அதனால் “வியாபாரம் இருக்காது” என்ற எண்ணத்திலிருந்து விலக வேண்டும். மனநிலையே வியாபாரத்தின் திசையை நிர்ணயிக்கும் முக்கிய அம்சம். மனதில் எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டு “இப்போ மந்தம்” என நம்புவது, தொழிலில் ஈடுபாட்டை குறைத்து விடுகிறது. இதுவே விற்பனை குறைவதற்கான முக்கிய காரணம்.
இப்போதைய சூழலில் வியாபார வளர்ச்சிக்கான முக்கிய நடவடிக்கைகள்:
மனநிலையே முதன்மை: தீபாவளி போன்ற பெரிய பண்டிகைகள் முடிந்தவுடன், பல வியாபாரிகளிடம் “இப்போ வியாபாரம் மந்தமாக இருக்கும்” என்ற ஒரு பொதுவான மனநிலை உருவாகிறது. ஆனால் உண்மையில் வியாபாரம் மந்தமாக இருப்பதற்குக் காரணம் சந்தை அல்ல, அந்த எதிர்மறை எண்ணமே.
தொழிலில் நாம் என்ன நினைக்கிறோமோ, அதே திசையில் செயல்பாடும் செல்லும். “வியாபாரம் இல்லை” என்று நம்பும் ஒருவர், தானாகவே ஆர்வத்தை இழந்து வாடிக்கையாளர்களை அணுகுவதிலும், புதிய யோசனைகளை முயற்சிப்பதிலும் பின்தங்கிவிடுவார். இதனால் விற்பனை குறைகிறது, ஆனால் இது சந்தை காரணமாக அல்ல, மனநிலை காரணம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/30/retail-g4-2025-10-30-18-37-16.jpg)
வெற்றி பெறும் வியாபாரிகள் இதை மாறாக சிந்திக்கிறார்கள். அவர்கள் பண்டிகைக்குப் பிறகும் புதிய வாய்ப்புகளை தேடி, தங்களின் சேவையை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுடன் நெருக்கத்தை அதிகரிக்கிறார்கள். அவர்கள் “மந்தம்” என்ற சொல்லையே தங்கள் அகராதியில் வைக்கமாட்டார்கள். சுருக்கமாகச் சொன்னால், வியாபாரம் குறைவதில்லை, அதை குறைக்கிறதே நமது மனநிலை. எனவே முதலில் மாற்ற வேண்டியது சந்தை அல்ல, நமது எண்ணம் தான்.
அன்றாட தேவைகள் குறையாது
தீபாவளி, பொங்கல், ரமலான் போன்ற பண்டிகைகள் முடிந்த பிறகு, சில வியாபாரிகள் “இப்போ விற்பனை குறையும்” என்று எண்ணுகிறார்கள். ஆனால் அந்த எண்ணம் அன்றாட தேவைகளைக் கொண்ட தொழில்களுக்கு பொருந்தாது. உணவு, மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள், தனிநபர் பராமரிப்பு பொருட்கள், குழந்தைகள் தேவைகள் போன்றவை மனிதர்களின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளன. மக்கள் எவ்வளவு பண்டிகை முடிந்த பிறகும், சாப்பிடாமல், சுத்தம் செய்யாமல், அன்றாட பொருட்களை வாங்காமல் இருக்க முடியாது.
அதாவது, தேவை (demand) இங்கு தொடர்ச்சியாகவே இருக்கும். மாற்றம் ஏற்படுவது வாடிக்கையாளர்கள் வாங்கும் அளவு அல்லது பிராண்ட் விருப்பத்தில் மட்டுமே. இதனை சரியாக புரிந்துகொண்டால், வியாபாரத்தில் “மந்தம்” என்றது ஒரு மனப்போக்கு மட்டும்தான் என்பதை உணரலாம். எடுத்துக்காட்டாக, பண்டிகை முடிந்ததும் மக்கள் சுகாதாரம், மழைக்கால உணவுப் பொருட்கள், வீட்டு பயன்பாட்டு பொருட்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துவார்கள்.
பள்ளி தொடங்கும் காலம், மழைக்காலம், மாத ஆரம்பம் போன்றவை புதிய விற்பனை வாய்ப்புகளை உருவாக்கும். அதனால், ரீட்டெயில் துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான உண்மை இதுதான், அன்றாட தேவைகள் குறையாது; அதனால் வியாபாரம் நிற்காது. மாறாக, வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்பதை கவனித்தாலே, பண்டிகைக்குப் பிறகும் சீரான விற்பனையைத் தொடர்ந்து செய்யலாம்.
சரியான சரக்கு நிர்வாகம் (Proper Stock Management)
ஒரு ரீட்டெயில் வியாபாரத்தின் இதயம் என்றால், அது சரியான சரக்கு நிர்வாகம். தீபாவளி போன்ற பெரிய பண்டிகைகளுக்குப் பிறகு, சில கடைகள் அதிக சரக்குகள் கையிருப்பில் வைத்திருக்கிறார்கள், சில கடைகள் தேவையான பொருட்களை குறைத்து விடுகிறார்கள். இரண்டிலும் தவறுகள் நடக்கக்கூடும். சரியான Sales Report History , Season - பருவநிலை, வாடிக்கையாளர் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சரக்குகளைத் திட்டமிடுவது அவசியம்.
சில முக்கிய வழிமுறைகள்:
பண்டிகைக்குப் பிறகு விற்பனை நிலையை கணக்கிடுங்கள், எந்தப் பொருட்கள் வேகமாக விற்றன, எவை கையிருப்பில் உள்ளன என்பதைப் பகுப்பாய்வு செய்யுங்கள். மழைக்காலம் / பருவத்துக்கேற்ப பொருட்களைத் தேர்வு செய்யுங்கள், தீபாவளிக்குப் பிறகு பெரும்பாலும் மழைக்காலம் இருக்கும், அப்போது தேவைப்படும் பொருட்கள் (மசாலா பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், (Hot Beverages, Soups) குடை, மழைக்கால ஆடை போன்றவை) மீது கவனம் செலுத்தலாம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/30/retail-g3-2025-10-30-18-37-16.jpg)
புதிய சலுகைகள் மூலம் பழைய சரக்குகளை நகர்த்துங்கள்: குறைந்த விலை சலுகைகள் அல்லது “காம்போ ஆஃபர்கள்” மூலம் பண்டிகை காலத்திற்கு வாங்கி தேங்கிய பொருள்களை மற்றும் விற்பனை செய்யலாம்.
சரியான நேரத்தில் சரக்கு புதுப்பிப்பு: குறைந்த அளவிலேயே சரக்கு வாங்கி, விற்பனைக்கு ஏற்ப மீண்டும் சேர்த்துக் கொள்ளுதல் பாதுகாக்கும் செயல்முறையாக இருக்கும்.
சரக்கு இருப்பு குறித்து மேலான்மையில் (Stock Management) பிழை நடந்தால், விற்பனைக்கு வாய்ப்பு இருந்தும் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும். அதே சமயம் சரக்கு அதிகமாக வைத்தால், பணம் முடங்கிவிடும், புழக்கம் மந்தமாகும். எனவே, “சரியான அளவு – சரியான பொருள் – சரியான நேரம்” என்ற மூன்று
அம்சங்களும் வியாபார வெற்றிக்கு அடிப்படை.
சுருக்கமாகச் சொன்னால், சரக்கு இருப்பு குறித்து மேலான்மை (Stock management) மற்றும் சரக்கு கட்டுப்பாடு (Inventory control) வியாபாரத்தின் கட்டுப்பாட்டை தீர்மானிக்கும்.
சேவையில் புதுமை (Innovation in Service): இன்றைய வியாபார உலகில், வாடிக்கையாளர்கள் பொருட்களை மட்டும் வாங்கவில்லை. அவர்கள் அனுபவத்தை (Experience) வாங்குகிறார்கள். அதாவது, ஒருவர் எளிதாக, சுலபமாக, விரைவாக வாங்கும் வாய்ப்பு கிடைத்தால், அவர் அந்த கடைக்கே மீண்டும் வருவார். இதற்காகவே சேவையில் புதுமை மிக அவசியம். தீபாவளிக்குப் பிறகு வியாபாரத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்க, சேவை முறைமைகளில் சிறிய மாற்றங்களும் பெரிய பலன்களையும் தரலாம்.
புதுமையாக செயல்பட சில வழிகள்:
டோர் டெலிவரி சேவை: மழைக்காலம் அல்லது பண்டிகைக்குப் பிறகு மக்கள் வெளியே வராமல் இருப்பார்கள். இந்நேரங்களில் வீடுகளுக்கு நேரடியாக பொருட்களை கொண்டு சேர்க்கும் சேவை விற்பனையை நிலைநிறுத்தும்.
ஆன்லைன் ஆர்டர் / வாட்ஸ்அப் ஆர்டர்: வாடிக்கையாளர்கள் அவர்களது தேவையை எளிதில் பகிர முடியும் வகையில் ஒரு சிறிய Digital platform அமைத்தால், விற்பனை தொடர்ச்சியாக இருக்கும்.
தனிப்பட்ட வாடிக்கையாளர் கவனம்: சில வாடிக்கையாளர்களின் பழக்கங்கள், தேவைகள், விருப்பங்களை பதிவு செய்து அவர்களுக்கு ஏற்ற சலுகைகள் வழங்குங்கள். இது வாடிக்கையாளர் விசுவாசம் (Customer Loyalty) உருவாக்கும்.
சலுகைகள் மற்றும் காம்போ ஆஃபர்கள்: ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், காம்போ ஆஃபர், மலைக்கால ஆஃபர் (Buy 1 Get 1, “Combo Packs”, “Rainy Season Offers”)  போன்ற சிறிய யோசனைகள் கூட வாடிக்கையாளர்களை மீண்டும் கடைக்கு இழுத்து வர முடியும்.
சுற்றுச்சூழல் நட்பு சேவை: பிளாஸ்டிக் பைகள் மாற்றாக சுற்றுச்சூழல் Eco friendly bags, Paper bags,  Organic packaging போன்ற சிறிய மாற்றங்கள் கூட வாடிக்கையாளர்களுக்கு நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும். மொத்தத்தில், சேவையில் புதுமை என்பது விற்பனையை அதிகரிப்பதற்கும், வாடிக்கையாளர்களின் மனதில் நம்பிக்கை உருவாக்குவதற்கும் 
முக்கியமான கருவி சுருக்கமாகச் சொன்னால் வாடிக்கையாளரை கவர்வது விலையால் அல்ல. உங்கள் சேவையின் புதுமையால் கவர்வது தான்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/30/retail-g1-2025-10-30-18-37-16.jpg)
ஒரு வியாபாரம் வளர்வதற்கான மிக வலிமையான அடித்தளம் — வாடிக்கையாளர்களுடன் உள்ள ரிலேஷன்ஷிப். பொருள் விற்கும் திறனை விட, வாடிக்கையாளருடன் நம்பிக்கை உருவாக்கும் திறனே நீண்ட கால வியாபார வெற்றிக்குத் தூணாகிறது. தீபாவளிக்குப் பிறகு விற்பனை சற்றுக் குறைவாக இருந்தாலும், இது வாடிக்கையாளர்களுடன் ரிலேஷன்ஷிப்பை வலுப்படுத்த சிறந்த நேரம். விற்பனை தானாகவே மீண்டும் உயரும்.
ரிலேஷன்ஷிப் வலுப்படுத்த சில முக்கிய வழிகள்:
தொடர்ந்து தொடர்பில் இருப்பது: வாடிக்கையாளர்களுக்கு புதிய பொருட்கள், சலுகைகள், பருவ நிலைக்கு ஏற்ப தேவையான பொருட்கள் பற்றிய தகவலை வாட்ஸ்அப், மெசேஜ் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக பகிருங்கள்.
அவர்களின் கருத்துக்களை கேட்பது: “பொருள் சரியா இருந்ததா?”, “டெலிவரி நேரம் சரியா?” போன்ற எளிய கேள்விகளும் வாடிக்கையாளர்களுக்கு நம்மை நம்ப வைக்கும்.
வாடிக்கையாளர்களின் பெயரை நினைவில் வைத்திருங்கள்: ஒருவர் கடைக்குள் வரும்போது “வணக்கம் ராஜா சார்!” என்று சொல்வது, ஒரு வியாபாரத்தை ஒரு குடும்ப அனுபவமாக மாற்றிவிடும்.
சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு சிறிய அன்பளிப்பு: பண்டிகை நாட்களில் அல்லது பிறந்தநாள்/ஆண்டு விழா நாட்களில் சிறிய பரிசு அல்லது தள்ளுபடி வழங்குவது ரிலேஷன்ஷிப்பை அதிகரிக்கும்.
புகார் வந்தால் உடனடி தீர்வு: வாடிக்கையாளர் புகார் சொல்லும்போது அதை எதிராக அல்ல, வாய்ப்பாக பாருங்கள். அதனை உடனே சரி செய்தால், அவர் வாழ்நாள் வாடிக்கையாளராக மாறுவார்.
வாடிக்கையாளர் ரிலேஷன்ஷிப் (Customer Relationship) என்பது வெறும் விற்பனைக்கு அல்ல, நம்பிக்கைச் சுற்றை (trust circle) உருவாக்குவதற்கான அடிப்படை.அது உருவானால், எந்தப் பருவத்திலும், எந்த சூழ்நிலையிலும் வியாபாரம் நிலையாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், வாடிக்கையாளர் உறவை உருவாக்கும் வியாபாரம். இதை வளர்ச்சியைத் தடுக்க யாராலும் முடியாது. வியாபாரத்தில் வெற்றி பெறுவது திட்டமிடல், உழைப்பு, சேவை ஆகியவற்றோடு சேர்ந்து மனநிலை என்பதிலும் தான் அதிகம் சார்ந்துள்ளது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/30/retail-g2-2025-10-30-18-37-16.jpg)
மனநிலையே நம்மை செயல்பட வைக்கும் சக்தி.
தீபாவளிக்குப் பிறகு வியாபாரம் மந்தமாகும் என பலர் நம்புவார்கள். ஆனால் அதே நேரத்தில் சிலர் அதைப் புது வாய்ப்பாகக் காண்கிறார்கள், இதுவே வித்தியாசம். எதிர்மறை எண்ணம் செயலிழப்பை ஏற்படுத்தும், பாசிட்டிவ் எண்ணம் செயல்திறனை அதிகரிக்கும்.
பாசிட்டிவ் எண்ணம் வியாபாரத்தில் தரும் பலன்கள்:
சோர்வில்லா மனநிலை: சவால்களை பயமின்றி எதிர்கொண்டு புதிய யோசனைகளை முயற்சிக்க உதவும்.
சுற்றியுள்ளவர்களுக்கு ஊக்கம்: உங்கள் உற்சாகம் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், சப்ளையர்களிடமும் பரவுகிறது.
புதிய வாய்ப்புகளை காணும் திறன்: சிக்கல் வந்தாலும் அதற்குள் வாய்ப்பை தேடுவது பாசிட்டிவ் எண்ணத்தால் மட்டுமே சாத்தியம்.
தொடர்ச்சியான வளர்ச்சி: சந்தை மாறினாலும், மனநிலை மாறாமல் இருந்தால் வியாபாரம் நிலைபெறும்.
ஒரு வியாபாரி மனதில் “இது முடியாது” என்று நினைத்தால், முயற்சியே நிற்கும். ஆனால் “நிச்சயமாக முடியும்” என்ற நம்பிக்கை இருந்தால் வழிகள் தானாக உருவாகும். வியாபாரத்தில் வெற்றி பெறுவோருக்கும் தோல்வியுறுவோருக்கும் இடையேயான உண்மையான வித்தியாசம், அவர்களின் எண்ணத்தின் திசை. சுருக்கமாகச் சொன்னால், நேர்மறை எண்ணம் இல்லாமல் வியாபார வெற்றி சாத்தியமில்லை; பாசிட்டிவ் எண்ணம் தான் எல்லா வளர்ச்சிக்கும் அடித்தளம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us