/indian-express-tamil/media/media_files/2025/10/15/uk-english-language-test-selt-2025-10-15-18-30-45.jpg)
UK announces tougher English language test rules for migrants
பிரிட்டனில் நிரந்தரமாகக் குடியேறத் திட்டமிடும் அல்லது குடியுரிமை பெற விரும்பும் புலம்பெயர்ந்தோர் இனிமேல், மிகவும் கடுமையான ஆங்கில மொழித் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், உள்துறை அலுவலகம் (Home Office) இந்த விதிகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
புதிய விதிகளின்படி, குடியேறிகள் பேசுதல் (Speaking), கேட்டல் (Listening), வாசித்தல் (Reading), மற்றும் எழுதுதல் (Writing) ஆகிய நான்கு திறன்களிலும் ஏ லெவல் (A-Level) தரத்திலான திறமையை நிரூபிக்க வேண்டும். இதுவரையிருந்த விதிகளுடன் ஒப்பிடும்போது, இப்புதிய நடைமுறை புலம்பெயரும் சமூகத்திற்கு ஒரு பெரிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஆங்கில மொழித் தேர்வு (SELT)
விசா அல்லது குடியுரிமைக்கான விண்ணப்பத்தின் போது, அனைத்துக் குடியேறிகளும் தங்களின் ஆங்கில அறிவை நிரூபிக்க அடையாளம் உறுதிசெய்யப்பட்ட ஆங்கில மொழித் தேர்வு (Secure English Language Test - SELT) ஒன்றை கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த (SELT) தேர்வு, பிரிட்டன் உள்துறை அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழங்குநரால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். தேர்வின் முடிவுகள், விசா விண்ணப்ப நடைமுறையின் ஒரு பகுதியாகச் சரிபார்க்கப்படும்.
உங்கள் பாதைக்கு ஏற்ற தேர்வு எது?
தற்போது, இரண்டு வகையான தேர்வுகள் உள்ளன. ஏனெனில், வெவ்வேறு குடியேற்றப் பாதைகளுக்கு வெவ்வேறு அளவிலான ஆங்கில மொழித் திறன் தேவைப்படுகிறது. நீங்கள் எதற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, நீங்கள் எடுக்க வேண்டிய தேர்வு அமையும்.
மாணவர் (Student), உயர் திறன் தனிநபர் (High Potential Individual), புதுமைப் புத்தாக்க நிறுவனர் (Innovator Founder), அல்லது திறன்மிக் பணியாளர் (Skilled Worker) போன்ற பிரிவுகளின் கீழ் நீங்கள் விண்ணப்பித்தால், உங்கள் வாசித்தல், எழுதுதல், பேசுதல் மற்றும் கேட்டல் திறன்களை மதிப்பிடும் தேர்வை எடுக்க வேண்டும்.
இருப்பினும், குடியுரிமை (Citizenship), பெற்றோர் (Parent), துணைவர் (Partner), அல்லது நிரந்தர வதிவிட அனுமதி (Settlement / Indefinite Leave to Remain) ஆகியவற்றிற்கு விண்ணப்பித்தால், பேசுதல் மற்றும் கேட்டல் திறன்களை மட்டும் மதிப்பிடும் தேர்வை எடுத்தால் போதும்.
நீங்கள் தேர்ச்சி பெற வேண்டிய ஆங்கிலத் தேர்வின் நிலை, ஐரோப்பிய மொழிகளுக்கான பொதுவான குறிப்புச் சட்டகம் (Common European Framework of Reference for Languages - CEFR) என அழைக்கப்படும் தரத்தில் இருக்கும். விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து இந்த நிலை மாறும்.
அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்கள் யார்?
இந்த (SELT) தேர்வை நடத்துவதற்கு உள்துறை அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்கள் தற்போது ஐவர் உள்ளனர். இவர்களிடம் மட்டுமே நீங்கள் தேர்வுகளை எழுத முடியும்:
(IELTS SELT Consortium: ‘IELTS for UKVI’
Pearson: ‘PTE Academic UKVI’
Trinity College London: ‘Secure English Language Tests for UKVI’
LANGUAGECERT
PSI Services (பிரிட்டனுக்கு வெளியே விண்ணப்பிப்பவர்களுக்கு))
விலக்கு யாருக்கு?
அனைவருக்கும் இந்தத் தேர்வு கட்டாயம் இல்லை. உள்துறை அமைச்சகம் அக்டோபர் 14 அன்று வெளியிட்ட குடியேற்ற விதிகளின்படி, டயர் 1 குடியேற்ற விசாவுக்கு (Tier 1 Migrant) விண்ணப்பிப்பவர் ஆங்கில மொழிக்கு 10 புள்ளிகள் வைத்திருக்க வேண்டும். பின்வரும் நபர்களுக்கு இந்த 10 புள்ளிகள் பொருந்தும்:
- பெரும்பான்மையாக ஆங்கிலம் பேசும் நாட்டுக் குடியுரிமை கொண்டவர்கள்.
- ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கப்பட்ட பட்டப்படிப்பு அல்லது அதற்குச் சமமான தகுதியைப் பெற்றவர்கள்.
- முந்தைய விசா அனுமதியின் மூலம் ஆங்கிலத் தேவையைப் பூர்த்தி செய்தவர்கள்.
(இருப்பினும், Tier 1 Exceptional Talent Migrant அல்லது Tier 1 (Investor) Migrant போன்ற பிரிவுகளில் விண்ணப்பிப்பவர்களுக்கு இந்தப் புள்ளித் தேவை பொருந்தாது)
ஏன் இந்த மாற்றம்?
உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) இந்த மாற்றத்தைப் பற்றிப் பேசுகையில், "பிரிட்டனுக்கு வந்து பங்களிப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இங்கு வந்து எங்கள் மொழியைக் கற்காமல், எங்கள் தேசிய வாழ்க்கையில் பங்களிக்க முடியாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் இந்த நாட்டிற்கு வந்தால், நீங்கள் எங்கள் மொழியைக் கற்று, உங்கள் பங்கை ஆற்றியே ஆக வேண்டும்," என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
பிரிட்டன் செல்லும் தமிழர்கள் உட்பட அனைத்துக் குடியேறிகளும், இனி தங்கள் விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன், இந்த (SELT) தேர்வுகளுக்குத் தீவிரமாகத் தயாராக வேண்டியது அவசியமாகிறது. இந்த புதிய ஆங்கிலத் திறன் சவால், புதியதொரு வாழ்க்கையைத் தேடிச் செல்வோர் மத்தியில் கூடுதல் உழைப்பையும், கவனத்தையும் வேண்டி நிற்கிறது. விரைவில் உள்துறை அலுவலகம் இது குறித்த கூடுதல் தெளிவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.