Aadhaar KYC Update, Aadhaar e-KYC: : நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும், 'ஆதார்' எனப்படும், தனிப்பட்ட அடையாள அட்டையை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ளது. ஆதார் மையங்களில், கைவிரல் ரேகைகள் மற்றும் கண் கருவிழி பதிவுடன், புகைப்படம் எடுக்கப்பட்டு, அவர்கள் வசிக்கும் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதார் அட்டை வழங்கப்பட்டது.
உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் என்பதன் சுருக்கமே கேஒய்சி(know your customer) என்று அழைக்கப்படுகிறது. வாடிக்கையாளரைப் பற்றித் தெரிந்து கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கும் வரையறைகளே இந்த கேஒய்சி என்பதாகும்.
வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டது. இதனால் பயனாளர்கள் இணைப்பை மேற்கொண்டனர். ஆதார் அடிப்படையில் இ- கேஒய்சிக்கான (e-KYC, Electronic Know Your Customer ) அங்கீகாரத்திற்கான ஒழுங்குமுறை, சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் யுஐடிஏஐ (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது சேவை வழங்கும் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை ஒருவர் எப்போது வேண்டும் என்றாலும் துண்டித்துக்கொள்ளலாம். ஆதார் எண் கொண்டிருப்பவர்கள், கேஒய்சிக்கு தகவல்களை சேமித்து வைப்பதை எப்போது வேண்டும் என்றாலும் ரத்து செய்துக்கொள்ளாலாம். பயனாளர்கள் ரத்து செய்யும் பட்சத்தில் நிறுவனங்கள் கேஒய்சி தரவுகளை நீக்கிவிட வேண்டும், மேற்கொண்டு பகிரக்கூடாது.
வாடிக்கையாளர் தகவல்களைச் சரிபார்க்க (இ-கேஒய்சி) தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதார் எண்ணை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு ஆதார் எண்ணைத் தர விருப்பமில்லாதவர்கள் அதற்கு மாற்றாக 16 இலக்க எண் ஒன்றை பயன்படுத்தும் வெர்ச்சுவல் ஐடி (விஐடி) முறையை யுஐடிஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
வெர்ச்சுவல் ஐடியை வாடிக்கையாளர் பகிர்ந்ததும் அவரது ஆதாருக்கென ஒதுக்கப்பட்டுள்ள தனித்த எண் (யுஐடி டோக்கன்) சேவை நிறுவனங்களிடம் சென்றுவிடும். இந்த முறையில் ஆதார் எண்ணை சேவை நிறுவனங்களால் அணுகமுடியாது. ஆதாரிலுள்ள அனைத்து தகவல்களையும் பகிராமல், குறிப்பிட்ட தகவல்களை மட்டும் சேவை நிறுவனங்களுடன் பகிரும் வகையில் யுஐடிஏஐ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் வங்கிகள், வருமான வரித் துறை போன்ற அமைப்புகளுக்கு ஆதாரிலுள்ள அனைத்து தகவல்களும் அனுப்பப்படும். தொலைத் தொடர்பு மற்றும் இ-வாலட் நிறுவனங்களுக்கு பெயர், முகவரி, புகைப்படம் போன்ற குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டுமே அனுப்பப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.