அகில இந்திய இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (ஜூலை 20) முதல் நடத்தப்படும் என்று மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஓராண்டு நீட் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்பணத் தொகை திருப்பித் தரப்பட மாட்டாது என்பது வழக்கமான நடைமுறையாக உள்ளது. தற்போது கூடுதலாக நீட் தேர்வு எழுத ஓராண்டு தடையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில் நேற்று தேசிய மருத்துவ ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 762 இடங்களும், இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரியில் 23 இடங்களும், அரசுப் பல் மருத்துவக் கல்லூரிகளில் 37 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்படுகிறது. மேலும் கே.கே நகர் இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 50 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவின் மூலம் நிரப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“