தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருந்த புத்தகக் கண்காட்சி கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தகக் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் 700-க்கும் அதிகமான அரங்குகளில் நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், சினிமா, சமையல், இலக்கியம், கதைகள், சிறுகதைகள், போட்டித் தேர்வு என பல தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன
குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் புத்தகக் கண்காட்சியில் காண முடிந்தது.
தினமும் ஒரு நிகழ்ச்சி நடத்தவும் ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. சிற்றுண்டி கடைகள், டீ-காபி கடைகளும் உள்ளன.
மிகப் பெரிய கொட்டகையில் புத்தகக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. நுழைவுக் கட்டணம் ரூ.10. நீங்கள் புத்தகக் கண்காட்சியை முழுமையாகப் பார்க்க வேண்டுமானால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் தேவைப்படும்!
அத்தனை பதிப்பகங்கள் உள்ளன. அவைகளில் எண்ணிலடங்கா புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு பதிப்பகம், காலச்சுவடு உள்ளிட்ட பதிப்பகங்களில் அதிகம் பேரை காண முடிந்தது. சினிமா சார்ந்த புத்தகங்களை அதிகம் பிரசுரித்து வரும் பியூர் சினிமா அரங்கில் இளைஞர்களின் கூட்டம் அதிகம்!
குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. புத்தகக் கண்காட்சி பார்த்துவிட்டு வெளியே வரும்போது தமிழக அரசு சார்பில் தொல்பொருட்கள் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.
இது அவசியம் பார்க்க வேண்டிய கண்காட்சி ஆகும். குறிப்பாக குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். நமது வரலாறு அவர்களுக்கு தெரிய வேண்டும் அல்லவா!
எந்த புத்தகத்தை நீங்கள் வாங்கச் சென்றாலும் அத்துடன் சேர்த்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ‘கீழடி வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ என்ற புத்தகத்தையும் மறக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள். இதன் விலை ரூ.50/- மட்டுமே.
வைகை நதிக்கரையில் உருவான தமிழர் பண்பாட்டை வெளிக்கொணர்ந்துவரும் கீழடி அகழாய்வு குறித்த தகவல்கள் அடங்கிய களஞ்சியம் தான் இந்த புத்தகம். அற்புதமான வரலாற்று நூல்!
தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் நடமாடும் அறிவியல் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: TNPSC Group 2, 2A: குரூப்-2 தேர்வு புதிய சிலபஸ் இதுதான்… டவுன்லோட் செய்வது எப்படி?
ரத்த தானம் செய்வதற்காக தனியாக லயன்ஸ் கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாகனம் தயாராக இருக்கிறது. அங்கு சென்று நீங்கள் ரத்த தானம் செய்ய முடியும்.
இப்படி பல நல்ல விஷயங்களை உள்ளடக்கி இருக்கும் 45-ஆவது புத்தகக் கண்காட்சியை தவற விட்டு விடாதீர்கள். குறிப்பாக சென்னையில் இருப்பவர்கள் கண்டிப்பாக ஒரு நாள் நேரம் ஒதுக்கிச் செல்லுங்கள்.
புத்தகம் குறித்து ஒரு பொன்மொழி
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் - ஆபிரகாம் லிங்கன், அமெரிக்க முன்னாள் அதிபர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.