தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உயர்கல்விக்கான சேர்க்கை முறைகள் குறித்து கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
இதில் பாலிடெக்னிக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என்று குழப்பம் நீடித்து வந்தது.
இந்த நிலையில், இன்று தலைமைச்செயலகத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கொரோனா பரவலால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 11 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை எப்படி நடைபெறுமோ, அப்படியே பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். அதாவது ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறினார்.
தமிழகத்தில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கையை நடத்தலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. முதல்வரிடம் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.
12 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு வழங்குவது என கல்விக் குழு ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களைப் போலவே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளன. சேலம் பெரியார் பல்கலைக்கழகம். காமராசர் பல்கலைக்கழகம். அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக் கழகங்களில் நியமனத்தில் தவறுகள் நடந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கலந்து பேசி, ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக் கழக விருப்பப்பாடங்களில் தமிழ் 9ஆவது பாடமாக இணைக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.