/indian-express-tamil/media/media_files/WBKXsTeWSErKXsbJnG39.jpg)
சாதிய அல்லது வகுப்புவாத எண்ணங்களை மாணவர்களிடையே ஏற்படுத்தும் ஆசிரியர்கள் மீது பெறப்படும் புகார்களை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக விசாரித்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்.
பள்ளிகளில் சாதி மற்றும் வகுப்புவாத உணர்வுகளை மாணவர்களிடையே பரப்பும் ஆசிரியர்கள் மீது புகார் வந்தால், உடனடியாக அவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், “ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் சாதி, இன உணர்வுகளால் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இக்குழு அமைக்கப்பட்டது.
சாதிய அல்லது வகுப்புவாத எண்ணங்களை மாணவர்களிடையே ஏற்படுத்தும் ஆசிரியர்கள் மீது பெறப்படும் புகார்களை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக விசாரித்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் 'மகிழ் முற்ற' குழு திட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் பள்ளிக்குள் கைபேசி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அதை பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பள்ளிகளில் திருக்குறள் அறநெறி வகுப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும்.
'மாணவர் மனசு' புகார் பெட்டி வாரந்தோறும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறக்கப்பட்டு, அதில் உள்ள புகார்கள் விசாரிக்கப்பட்டு, மாவட்ட மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் மூலம் பள்ளிச் சூழலில் நல்லிணக்கத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.