தமிழகத்தில் உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த பணியிடங்களுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், தமிழகம் முழுவதும் 1021 உதவி மருத்துவர்களை நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு http://mrbonline.in/ என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைன் மூலம் 25.10.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: மாநில கல்விக் கொள்கை: மாவட்டம் வாரியாக கருத்து கேட்கும் தமிழக அரசு
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலமாக நியமனங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
3 மணி நேரம் நடைபெறக் கூடிய தேர்வில், 2 மணி நேரம் மருத்துவம் சார்ந்த 200 வினாக்கள் அடங்கிய தாளுக்கு விடையளிக்க வேண்டும். 50 வினாக்கள் அடங்கிய தமிழ் மொழித் தகுதித் தேர்வு 1 மணி நேரம் நடைபெறும். இதில் 40% அதாவது 20 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம்.
தமிழக அரசுப் பணிகளில் தமிழர்கள் இடம்பெறுவதை உறுதி செய்யவும், வெளி மாநிலத்தவர்கள் இடம்பெறுவதை தவிர்க்கவும், தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.
அந்த வகையில் தற்போது மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியமும் தற்போது தமிழ் மொழித் தகுதித் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. தற்போது மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ள உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வில் தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிற மாநிலத்தவர்களை தவிர்க்கும் வகையில் இவ்வாறு விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil