குரூப் 1 தேர்வுக்கான உத்தேச அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டிருக்கிறது.
அதில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குரூப் 1 முதல் நிலை தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வுக்கான அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்னதாக வெளியிட்ட தேர்வு அட்டவணையில் குரூப் 1, குரூப் 2/2ஏ, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் 2023ல் நடைபெறாது என்று குறிப்பிட்டிருந்தனர்.
தற்போது, வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் குரூப் 1 பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும், முதல்நிலைத் தேர்வு 2023, 23 நவம்பர் நடைபெறும் என்றும், முதன்மைத் தேர்வு 2024 ஜுலை 24ம் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட தேர்வு திட்ட அட்டவணையிலும் குரூப் 2/2ஏ தேர்வுக்கான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
அதைப்போல, 2023ல் குரூப் 4 தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்களும், தேர்வர்களும் கோரிக்கை வைத்தும், அத்தேர்வுக்கான அறிவிப்பும் இடம் பெறவில்லை. குரூப் 1 தேர்வில் வெற்றிபெறுவோரின் பணியிடங்கள் மட்டுமே கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தாண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள், துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் என்று 92 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு, அக்டோபர் மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 3.22 லட்சம் பேர் பதிவுசெய்த நிலையில், 1.9 லட்சம் பேர் தேர்வில் கலந்துகொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.