/indian-express-tamil/media/media_files/2025/07/14/tnpsc-exam-2025-07-14-16-44-00.jpg)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ தேர்வை இன்று (செப்டம்பர் 28) நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் நேர்முகத் தேர்வு அடங்கிய 50 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 595 பணியிடங்களும் என 645 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம். எக்ஸாம் குரு காளி என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி, “குரூப் 4 தேர்வை விட தமிழ் பகுதி எளிதாக இருந்தது. அதேநேரம் தமிழ் பகுதியைப் போலவே ஆங்கில பகுதியின் கடின அளவும் இருந்தது. தேர்வு நீளமானதாக, ஆவரேஜ் அளவில் இருந்தது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 100 கேள்விகளில் 80-85 கேள்விகளுக்கு விடையளிக்கலாம். திறனறி பகுதி எளிதாக இருந்தாலும், அதிக நேரம் தேவைப்பட்டது. கணித வினாக்கள் பெரும்பாலும் நேரடியாக இருந்தன. திறனறி மற்றும் கணித பகுதியில் 25 கேள்விகளில் 20 கேள்விகளுக்கு விடையளிக்கலாம்.
பொது அறிவு பகுதி அதிக நேரம் தேவைப்படுவதாக மட்டுமல்லாமல், கடினமாகவும் இருந்தது. இதில் 75 கேள்விகளில் 50-55 கேள்விகளுக்கு விடையளிக்கலாம். எனவே ஒட்டுமொத்தமாக 150 கேள்விகளுக்கு விடையளித்தவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகலாம்.”
இதேபோல், டிஜிட்டல் பாரதி என்ற யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவின்படி, “தமிழ் பகுதி சற்று எளிமையாக இருந்தது. குரூப் 4 தேர்வைப் போலவே கேள்விகள் இடம்பெற்றிருந்தன. பொது அறிவுப் பகுதியில் அறிவியலில் 7 கேள்விகளும், புவியியலில் 6 கேள்விகளும், வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கத்தில் 10 கேள்விகளும், அரசியலமைப்பில் 15 கேள்விகளும், பொருளாதாரத்தில் 10 கேள்விகளும், தமிழ் கலாச்சாரத்தில் 18 கேள்விகளும், நடப்பு நிகழ்வுகளில் 9 கேள்விகளும், திறனறி மற்றும் கணிதத்தில் 25 கேள்விகளும் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
பொது அறிவு கேள்விகள் நல்ல தரத்தில் இருந்தன. பெரும்பாலும் புதிய கேள்விகளாக இருந்தன. வரலாறு மற்றும் அரசியலமைப்பில் கேள்விகள் எளிதாக இருந்தன. அதேநேரம் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. கணிதம் மற்றும் திறனறி பகுதி எளிதாக இருந்தாலும், நீளமான வினாக்களாக இருந்தன. இது அதிக நேரம் எடுக்கக் கூடியதாக இருந்தது. எனவே 150 கேள்விகளுக்கு மேல் எடுக்க வாய்ப்பு உள்ளவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகலாம்.”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.