/indian-express-tamil/media/media_files/2025/07/14/tnpsc-exam-2025-07-14-16-44-00.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ள நிலையில், எந்தத் தேதியில் வெளியாகும், வி.ஏ.ஓ பதவி யாருக்கு கிடைக்கும்? என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 4662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அறிவிப்பின்போது 3935 பணியிடங்கள் இருந்த நிலையில், தற்போது 727 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த குரூப் 4 தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில், குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், தேர்வு முடிவுகள் எந்தத் தேதியில் வெளியாகும், வி.ஏ.ஓ பதவி யாருக்கு கிடைக்கும்? என்பது குறித்த தகவல்கள் ஜாப்ஸ் பாயிண்ட் ஹியர் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
வீடியோவின்படி, குரூப் 4 காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. குரூப் 4 தேர்வில் 218 வி.ஏ.ஓ பணியிடங்களும், 2410 இளநிலை உதவியாளர் பணியிடங்களும், 1101 தட்டச்சர் பணியிடங்களும், 351 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. வனப் பதவிகளில் 262 பணியிடங்களும் உள்ளன. இதுதவிர பிற பதவிகள் 320 பணியிடங்கள் உள்ளன.
குரூப் 4 தேர்வை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். வி.ஏ.ஓ பதவிகளை பொறுத்தவரை தேர்வு எழுதிய 7000 பேரில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும். மேலும் 165 கேள்விகளுக்கு மேல் சரியாக பதில் அளித்தவர்களுக்கு மட்டுமே வி.ஏ.ஓ பதவிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 145 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் இருந்தாலே வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
குரூப் 4 தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ள நிலையில், இரண்டாம் வாரத்தில் முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.